சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த தொடர்களில் ஒன்றாக இருந்தது நாதஸ்வரம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான இந்த தொடர், குடும்பக் கதைக்களம், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் இயல்பான நடிப்பால் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த தொடரின் மூலம் பல நடிகர், நடிகைகள் ரசிகர்களிடம் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றனர். அந்த வகையில், திருமுருகனின் தங்கைகளில் ஒருவரான ராகிணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ருதியும் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக மாறினார்.
நாதஸ்வரம் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கல்யாண பரிசு உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்தார். ஒவ்வொரு தொடரிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற அவர், நீண்ட காலமாக சின்னத்திரை உலகில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்தார்.
இதற்கிடையில், தனது நீண்டநாள் காதலரான அரவிந்த் சேகரை 2024ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணம் மகிழ்ச்சியான தொடக்கமாக அமைந்தது. திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. புதுமண தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்தன.
இதையும் படிங்க: நிர்வாணக் காட்சியின் போது ரிப்பேரான கேமரா..!! ரொம்ப நேரமா அப்படியே நின்றேன்.. நடிகை புளோரன்ஸ் பக் பகிர்ந்த அனுபவம்..!

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டிருந்த அரவிந்த் சேகர், திருமணமாகி சில மாதங்களிலேயே திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், சின்னத்திரை ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண வாழ்க்கையை புதிதாகத் தொடங்கிய நிலையில் ஏற்பட்ட இந்த இழப்பு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கணவரின் மறைவுக்குப் பிறகும், அவரைப் பற்றிய நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் ஸ்ருதி. சமூக வலைதளங்களிலும், பல்வேறு நேர்காணல்களிலும் தனது கணவர் இன்னும் தன்னுடன் இருப்பதாக உணர்கிறேன் என்றும், அவருடன் மனதளவில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதாகவும் அவர் பலமுறை கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. அண்மையில் அளித்த பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மேலும் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை ஸ்ருதி.
குறிப்பாக இரண்டாவது திருமணம் குறித்து எழும் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அவர் கூறுகையில், “என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் பெற்றோர்களும், என் மாமியாரும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் என் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில்தான் அதைச் சொல்கிறார்கள். ஆனால் திருமணம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு. இந்த சமூக கட்டமைப்பில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை,” என்று தெரிவித்தார்.

மேலும், “தனியாக வாழ்வதும் ஒரு திறமை. அதேபோல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்குவதும் ஒரு திறமை. இதில் எது சரி, எது தவறு என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அது முழுவதும் அந்தந்த நபரின் விருப்பம் மற்றும் மனநிலையைப் பொறுத்தது,” என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், எதிர்காலம் குறித்து மிகவும் உணர்வுப்பூர்வமான கருத்தையும் பகிர்ந்துள்ளார். “ஒருநாள் எனக்கு வேறு ஒருவரை பிடித்தாலும், அந்த மனிதரை என் வாழ்க்கைக்குள் அனுப்பி வைத்தது என் பாதுகாவலர் தேவதையான என் கணவர்தான் என்று நான் நம்புவேன். அவர் உடலால் இல்லாவிட்டாலும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக எப்போதும் இருப்பார்,” என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஸ்ருதியின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. கணவரை இழந்த துயரத்திலிருந்து மீண்டு வர முயற்சித்தாலும், அவருடைய நினைவுகளை அன்போடு சுமந்து வாழும் விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேசமயம், இரண்டாவது திருமணம் என்பது கட்டாயம் அல்ல; அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்ற அவரது கருத்துக்கும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரை ரசிகர்கள் பலரும், ஸ்ருதி மீண்டும் முழு உற்சாகத்துடன் தனது கலைப் பயணத்தை தொடர வேண்டும் என்றும், அவர் எடுக்கும் எந்த வாழ்க்கை முடிவையும் மதிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘மகாநதி’ சீரியல் கங்காவா இது..?... மணப்பெண் கோலத்தில் அசத்திய நடிகை தாரு..!! புதிய போட்டோஷூஸ் இணையத்தில் வைரல்..!