×
 

மீண்டும் மீண்டுமா..!! ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்..!!

ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஹிரந்தாஸ் முரளி, ‘வேடன்’ என்ற பெயரால் அறியப்படும் பிரபல ராப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். 2020இல் வெளியான வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் என்ற முதல் இசை ஆல்பம், சாதி, நிறவெறி, விளிம்புநிலை மக்களின் போராட்டங்களைப் பற்றிய துணிச்சலான வரிகளால் 13 மில்லியன் பார்வைகளைப் பெற்று புகழ் பெற்றது. இலங்கை ஈழத் தமிழ் தாய்க்கும், கேரள பனையர் சமூகத்தைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த வேடன், திருச்சூரில் வளர்ந்தார். பொருளாதார நெருக்கடியால் கட்டுமானத் தொழிலாளராகப் பணியாற்றிய இவர், இசை ஆர்வத்தால் பி.அஜித் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

2024இல் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இவர் எழுதி பாடிய குதந்திரம் பாடல் தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாயாட்டு, கொண்டல் உள்ளிட்ட படங்களிலும் பங்களித்து, மலையாள ராப் இசையில் புரட்சிகர குரலாக உருவெடுத்தார். ஆனால், 2025 ஏப்ரலில் கொச்சியில் 6 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகவும், புலிப்பல் செயின் அணிந்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: மராத்தி திரையுலகிற்கு பேரிழப்பு..! காலமானார் பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர்..!

தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், வேடன் திருமண வாக்குறுதி அளித்து தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், திருக்காக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வேடன் மீது லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில் ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். இது கேரள சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு பெண்களும் முனைவர் பட்ட ஆய்வாளர்களாக உள்ளனர். இவர்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வேடனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளனர். இதனால், புகாரளித்த பெண்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. 

முதலமைச்சருக்கு கிடைத்த புகார்கள் இன்று டிஜிபியிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இசை குறித்து ஆராய்ச்சி செய்வதாக கூறி கொச்சிக்கு வரவழைத்து வேடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவரும், வேடன் இசை நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட தன்னை, பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக மற்றொருவரும் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வேடன் தாக்கல் செய்திருந்த மனு மீது கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. வேடனின் இசை ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலித்தாலும், சர்ச்சைகள் அவரை சூழ்ந்துள்ளன. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், இவரது எதிர்காலம் சட்டப் போராட்டங்களால் கேள்விக்குறியாக உள்ளது. 

இதையும் படிங்க: பலரையும் கண்கலங்க வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்..! ஒரே பதிவில் மனதுருக செய்த சம்பவம்..!  

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share