ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரம்.. இயக்குநர் பா.ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு..!
ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' படத்தை தொடர்ந்து, தற்போது 'வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். இதனை நீலம் புரொடக்சன் தயாரிக்க, ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த 10ம் தேதி முதல் நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இதையும் படிங்க: இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்.. ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு..!
இந்த நிலையில் நேற்று சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கார் மேலே பறந்து தரையிறங்க வேண்டும் என்பதுதான் காட்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கார் தரையில் உருண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது காருக்குள் இருந்த மோகன்ராஜ் பலத்த காயத்தோடு சுயநினைவை இழந்தார். மேலும் கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கிருந்த சக கலைஞர்கள் உடனடியாக அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மோகன்ராஜ் ஸ்டண்ட் யூனியனின் முக்கிய நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் திரைக் கலைஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வளவு ஆபத்தான சண்டைக் காட்சிகள் தேவைதானா? எதற்காக ஒரு உயிருடன் விளையாட வேண்டும் என பா ரஞ்சித்துக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோன்று ராஜ்கமல், வினோத், பிரபாகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அழகு தேவதையாக மாறி காட்சியளித்த நடிகை தமன்னா..! ஹாட் போட்டோ லிஸ்ட் இதோ..!