×
 

‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம்.. கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஜூன் 5ம் தேதி அன்று வெளியானது தக் லைஃப் திரைப்படம். தமிழ் கேங்க்ஸ்டர் ஆக்ஷன் டிராமா திரைப்படமான இது, நாயகன் (1987) திரைப்படத்திற்குப் பிறகு கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவான இரண்டாவது படமாகும். மேலும் இது கமல்ஹாசனின் 234-வது திரைப்படமாகும். 

இந்த படம் 1994-ம் ஆண்டு பழைய டெல்லியை மையமாகக் கொண்டு, கமல்ஹாசன் நடித்த ரங்கராய சக்திவேல் என்ற மாஃபியா தலைவனின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கிறது. அவரது அண்ணன் ரங்கராய மாணிக்கம் (நாசர்) மற்றும் அவர் வளர்த்த அமரன் (சிலம்பரசன்) ஆகியோரால் ஏற்படும் துரோகத்திற்குப் பிறகு, பழிவாங்குதல் மற்றும் மீட்பு குறித்து கதை பயணிக்கிறது. சக்திவேல் தனது எதிரிகளை எதிர்கொள்ளும் விறுவிறுப்பான கதையாக இது அமைந்துள்ளது.

இதையும் படிங்க: நடிகர் சிம்புவை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்... என்ன சொன்னார் தெரியுமா..?

தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற தக் லைஃப் திரைப்படம், கர்நாடகாவில் வெளியாகாமல் போனது கமல்ஹாசனின் புரோமோஷன் விழாவில் கன்னட மொழி குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் ஆகும். இதனால், கர்நாடகாவில் படத்தைத் திரையிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது, மேலும் திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பு மிரட்டல் விடுத்தது. அதனை தொடர்ந்து, கமல்ஹாசன் மன்னிப்பு கோரினால் மட்டுமே கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை திரையிடுவோம் என்று கன்னட சினிமா வர்த்தக சபை கூறியது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் 'தக் லைப்' படம் அங்கு வெளியாக தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மகேஷ் ரெட்டி என்பவர் கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்த ரிட் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) ஒப்புதல் இருந்தும், சில சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் காரணமாக கர்நாடகாவில் படம் வெளியாகாமல் தடுக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்துக்களால் உருவாக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல்களால் படத்திற்கு சட்டபூர்வமாக தடை எதுவும் இல்லாதபோதும் படம் அதிகாரப்பூர்வமற்ற தடைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூன்.13) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “படம் திரையிடப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. வெறுப்பு பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன. திரையரங்குகளுக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. படம் திரையிடப்பட முடியாத சூழ்நிலை உள்ளது” என்று வாதிட்டார். வாதங்கங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம், தக் லைஃப் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து, இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: மலையாள பிட்டு படங்களுடன் என்னை வச்சு பேசுறாங்க..! சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னா.. நடிகை திரிஷா அப்செட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share