தென்னிந்திய சினிமாவின் மறக்க முடியாத இசைப் படைப்பாளர்களில் ஒருவரான எஸ்.பி. வெங்கடேஷ் இன்று (பிப்ரவரி 3, 2026) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.
1955 மார்ச் 5-ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்த வெங்கடேஷ், இசைக்கு ஆர்வம் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார். அவரது தந்தை பழனி ஒரு சிறந்த மாண்டலின் கலைஞர். மூன்று வயதிலிருந்தே தந்தையிடம் இசை பயின்ற வெங்கடேஷ், பின்னர் கிட்டார் உள்ளிட்ட பல இசைக் கருவிகளில் தேர்ச்சி பெற்றார். ஆரம்ப காலத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ரவீந்திரன் மற்றும் ஏ.டி. உம்மர் ஆகியோருக்கு உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் அவரது திறமைக்கு அடித்தளமாக அமைந்தது.

1981-இல் 'பிரேம யுத்தம்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் சுயேச்சையான இசை அமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், அவரது புகழ் மலையாள சினிமாவில் தான் உச்சத்தைத் தொட்டது. 1986-இல் தம்பி கண்ணந்தானம் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'ராஜாவின்டே மகன்' படத்தின் இசையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 1985 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் மலையாள சினிமாவின் மிகச் சிறந்த இசைப் படைப்பாளராக விளங்கினார்.
இதையும் படிங்க: பெரிதாக கவர்ச்சியும் இல்ல.. கிளாமரான லுக்கும் இல்ல..! ஆனாலும் இளசுகளை சிரிப்பால் மயக்குறீங்களே ஷாலினி..!
'இந்திரஜாலம்', 'துடர்கதா', 'வாத்சல்யம்', 'ஜானி வாக்கர்', 'கிலுக்கம்', 'ஹிட்லர்', 'சோபானம்', 'காபூலிவாலா', 'மின்னாரம்', 'ஸ்படிகம்' போன்ற பல மலையாளத் திரைப்படங்களில் அவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன. 'அப்பு', 'மகாயானம்', 'தேவாசுரம்' போன்ற படங்களுக்கான பின்னணி இசையும் அவரது தனித்துவமான பாணியை வெளிப்படுத்தியவை.
மலையாளத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த வெங்கடேஷ், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 500 பாடல்களை உருவாக்கியுள்ளார். தம்பி கண்ணந்தானம் இயக்கிய படங்களில் அதிகம் பணியாற்றிய அவர், கவிஞர் கிரீஷ் புத்தஞ்சேரி உடன் இணைந்து பல நினைவில் நிற்கும் பாடல்களை வழங்கினார்.
பாடகி கே.எஸ். சித்ரா அவரது பாடல்களை அதிகம் பாடியவர். 'குஞ்சிக்கிளியே கூடவிடே', 'கிலுகில் பம்பரம்', 'மீனவேனலில்', 'ஊட்டிப்பட்டணம்', 'சாந்தமீ ராத்திரியில்', 'முத்துமணித்தூவல் தரான்', 'கனகநிலாவே துயிலுணரூ', 'பாதிராக்கிளி வரூ', 'கறுகவயல் குருவி', 'மாலினியுடே தீரங்கள்', 'நீலாஞ்சன பூவின்', 'அலையும் காட்டின் ஹ்ருதயம்', 'தாமரக்கண்ணனுறங்கேணம்', 'புத்தன்புதுக்காலம் முத்தமிட்ட நேரம்', 'காபூலிவாலா நாடோடி', 'பால்நிலாவினும்', 'நிலாவே மாயுமோ', 'ஒரு வல்லம் பொன்னும் பூவும்', 'ஆற்றிரம்பில் ஆல்மரத்தில்', 'ஏழிமலை பூஞ்சோலை', 'பருமலச்செருவிலே', 'நீயுறங்கியோ நிலாவே' போன்ற எவர்கிரீன் பாடல்கள் அவரது இசைப் பயணத்தின் சான்றுகளாகத் திகழ்கின்றன.

சென்னையில் காலமான எஸ்.பி. வெங்கடேஷின் இறுதிச் சடங்கு, சென்னையின் ஆலப்பாக்கம் பகுதியில் நாளை நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். மலையாள திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
திரையுலகில் பல தலைமுறைகளை கவர்ந்த அவரது இசை, இனி வரும் காலங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது மறைவு தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் இழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம்.
இதையும் படிங்க: ஒன்றரை ஆண்டுகால வலி.. மூன்றே நாட்களில் சுகமாக்கிய வைத்தியர்..! நடிகர் அரவிந்த் சாமி உருக்கமான பேச்சு..!