தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாவதாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பக்தர்களின் அளவற்ற நம்பிக்கைக்கு உறுதுணையாகத் திகழ்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி போன்ற முக்கிய திருவிழாக்களின்போது பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்கிறது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களிலும் கோயில் நிரம்பி வழிகிறது.
பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் பல்வேறு நவீன வசதிகளை செய்து வருகிறது. மலைக்கு மேல் செல்ல மின் இழுவை ரயில், ரோப் கார், விரைவுத் தரிசன டிக்கெட்டுகள், காலபூஜை, பஞ்சாமிர்தம் வழங்கல், தங்கரத உலா உள்ளிட்ட சிறப்பு சேவைகள் பக்தர்களுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உண்டியல் காணிக்கைகளை ஆன்லைன் மூலமாகவும், நேரடி கவுண்ட்டர்கள் வாயிலாகவும் வசூலிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் ‘பசலி ஆண்டு’ (ஜூலை 1 முதல் ஜூன் 30) கணக்கீட்டின்படி, 1435-ஆம் பசலி ஆண்டில் (01.07.2025 முதல் 30.06.2026 வரை) பழனி மலைக்கோயிலின் மொத்த வருவாய் ரூ.103,24,13,525 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக 100 கோடி ரூபாய் வருவாயைத் தாண்டிய மாபெரும் வரலாற்றுச் சாதனையை கோயில் நிர்வாகம் படைத்துள்ளது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (08-07-2026)..!! மிதுன ராசிக்காரர்களே.. இன்று ..!!
கடந்த ஆறு ஆண்டுகளில் வருவாய் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. 2020-ல் ரூ.15.28 கோடியாக இருந்த வருவாய், 2021-ல் ரூ.41.97 கோடியாகவும், 2022-ல் ரூ.80.62 கோடியாகவும், 2023-ல் ரூ.86.06 கோடியாகவும், 2024-ல் ரூ.97.32 கோடியாகவும் உயர்ந்து, தற்போது 103.24 கோடியை எட்டியுள்ளது. பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வசூலாகும் இந்தத் தொகை முழுவதும் கோயிலின் உள்கட்டமைப்பு மேம்பாடு, பக்தர்களுக்கான அன்னதானம், தூய்மைப் பணிகள், பராமரிப்பு மற்றும் பிற நலன்புரி நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்துள்ளது. பழனி முருகனின் அருளால் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை கோயில் நிர்வாகம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா..!! கும்பாபிஷேக ஆண்டு உற்சவம் கோலாகலம்..!!