நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் பாதிக்கும் மேல் சிசேரியன் மூலம் தான் நடைபெறுவதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. 2023-24ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, தனியார் மருத்துவமனைகளில் 54 சதவீத பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடைபெற்றுள்ளன.
மிக அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் 87.7 சதவீதம் பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடைபெறுகின்றன. தெலங்கானாவில் 84 சதவீதமும், ஆந்திரப் பிரதேசத்தில் 66 சதவீதமும் சிசேரியன் பிரசவங்கள் பதிவாகியுள்ளன. இந்த விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
2004-05ல் இந்தியாவில் சிசேரியன் பிரசவ விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது. 2015-16ல் 17.2 சதவீதமாகவும், 2019-21ல் 21.5 சதவீதமாகவும் உயர்ந்தது. தற்போது தனியார் மருத்துவமனைகளில் இது 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் இந்த விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக 16.9 சதவீதமாக உள்ளது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் விகிதம் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் ஆய்வில் அம்பலமான முறைகேடுகள்..! அதிரடி சஸ்பெண்ட்..! தமிழக சட்டத்துறையில் அதிர்ச்சி..!!

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் 39 சதவீதத்துக்கும் மேல் பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடைபெறுகின்றன. தெலங்கானாவில் 48 சதவீதமும், கர்நாடகாவில் 34 சதவீதமும், ஆந்திராவில் 38 சதவீதமும் பதிவாகியுள்ளன. மறுபுறம் பீஹார் (13%), ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் (16%) போன்ற மாநிலங்களில் சிசேரியன் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) சிசேரியன் பிரசவ விகிதத்தை 10 முதல் 15 சதவீதம் வரை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகக் கருதுகிறது. ஆனால் பல நாடுகளில் இது அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் 32 சதவீதம், இங்கிலாந்தில் 45 சதவீதம், பிரேசிலில் 52 சதவீதத்துக்கும் மேல் சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஸ்வீடன் (19%), நார்வே (16%), பிரான்ஸ் (21%) போன்ற நாடுகள் தேவையற்ற சிசேரியன் அறுவை சிகிச்சைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மருத்துவத் தேவை இல்லாமல் சிசேரியன் செய்யப்படுவது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இயற்கை பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சுகாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: 5 நாட்களில் துவங்குகிறது தென்மேற்கு பருவமழை!! நாளை 17 மாவட்டங்களில் கனமழை! வெதர் அப்டேட்!