ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8ஆம் தேதி மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அன்று இரவு தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அரிகிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளை 30 மீனவர்களையும் கைது செய்தனர்.
இதனையடுத்து இலங்கை அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25,000 மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவது மட்டுமல்லாது நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. தங்களது போராட்டத்தை ஏற்று
மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: தமிழக சட்டசபை கூட்டத்தின் 2வது நாள்..!! முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!
இந்த நிலையில் இன்று மீனவர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றதை அடுத்து இன்று காலை மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான டீசல், ஐஸ்கட்டி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கடலுக்குச் சென்றனர். நான்கு நாட்கள் கழித்து மீன் பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றாலும் இலங்கை கடற்படை கைது செய்து விடுமோ என ஒருவித அச்சத்துடனே கடலுக்கு செல்வதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “ஜோலி முடிஞ்சது” - சீனாவை காலி செய்யப்போகும் அமெரிக்கா... பிரம்மாஸ்த்திரத்தை கையில் எடுத்த டிரம்ப்...!