2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இப்போதிலிருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த கூட்டணிக்குள் கூட்டணி ஆட்சியா?, கூட்டணி கட்சி தலையிலான ஆட்சியா? என்ற சர்ச்சை முற்றுப்புள்ளி இல்லாமல் நீடித்து வருகிறது. மற்றொருபுரம் திமுக தேர்தலுக்கான மினி பரப்புரையை இப்போதே தொடங்கிவிட்டதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே திமுகவிலும் கூடுதல் சீட்டு கேட்டு குடைச்சல் கொடுக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

இதனிடையே பாமக, தவெக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து 3வதாக ஒரு கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த களோபரத்திற்கு இடையே எப்படியாவது ஆட்சியைப் பிடித்தாகவும் வேண்டும் என்றும், பாஜகவுடனான திடீர் கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களை சரி கட்ட வேண்டும் என பல பிரச்சனைகளை சிக்கித் தவித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க: சாவியை தொலைச்சுட்டீங்களா ஸ்டாலின்? பெட்டி பெட்டியாக வாங்கிய மனுக்கள் நிலை என்ன? இபிஎஸ் கிடுக்குப்பிடி கேள்வி..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருக்கடி நிலையை உணர்ந்த உண்மை விசுவாசியாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்துள்ள காரியம், சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை செய்ததோடு, தியானத்திலும் ஈடுபட்டுள்ளார்.

ஶ்ரீவில்லிப்புத்தூர் சரபேஸ்வர் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்ற ராஜேந்திர பாலாஜி, சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ராஜேந்திர பாலாஜியின் இந்த திடீர் பூஜை, தியானம் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அப்ப சேலம்.. இப்போ சென்னை.. எடப்பாடி பழனிசாமிக்கு சோதனை மேல் சோதனை..!