தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் இல்லம் திருச்சி தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது.
அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான சென்னை, திருச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனை அறிந்த திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட கட்சியினர் கே.என். நேருவின் இல்லத்திற்கு வருகை தந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் யார் யாரிடம் லஞ்சம் பெறப்பட்டது, அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளும் வகையில், தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கே.என். நேருவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் திமுகவினர் தற்போது அங்கு குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
இந்தச் சோதனையின் முடிவில் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதா, ஆயிரம் கோடி ரூபாய் பணம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்த மேலும் என்னென்ன தகவல்கள் வெளியாகின்றன என்பது தெரியவரும்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் திருச்சி தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெரு பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!