கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கேரளாவை சேர்ந்த இரு பெண்கள் வெவ்வேறு சம்பவங்களில் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், உயிரிழந்த பெண்களின் நெருங்கிய தோழியான மற்றொரு கேரள பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அஞ்சனா ஹரி, 35, அமெரிக்காவில் ஆசிரியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆன்மேரி மேத்யூ, 40, பொறியாளராக இருந்துள்ளார். கோட்டயத்தை சேர்ந்த அனிலா, 32, இவர்களின் நெருங்கிய தோழியாக இருந்துள்ளார். மூவரும் நீண்டகாலமாக நட்புடன் பழகி வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று, அஞ்சனாவை அவரது வீட்டில் இருந்து வெளியே வரவழைத்த அனிலா, காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காரை பயன்படுத்தி அஞ்சனா மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: பண்டிகையை கொண்டாடுங்கடே! கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்! அமெரிக்கா கொடுத்த அங்கீகாரம்!
சம்பவத்தை கவனித்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், சந்தேகத்துக்குரிய கார் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த அனிலா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்பாக, மற்றொரு தோழியான ஆன்மேரி மேத்யூ சான் ஹோசே நகரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு கொலைகளுக்கும் ஒரே நபருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனிலா சமீபத்தில் அமெரிக்காவில் தனது வேலையை இழந்ததாகவும், அதே காலகட்டத்தில் அவரது இரு தோழிகளுக்கும் புதிய வேலை கிடைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அல்லது பொறாமை உள்ளிட்ட காரணங்கள் கொலைக்கு பின்னணியாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் கொலைக்கான உறுதியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
குறிப்பாக, சம்பவத்திற்கு முந்தைய நாளில் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் மூன்று பெண்களும் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரையரங்கிற்கு சென்று திரைப்படமும் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட இரு பெண்களின் உடல்களையும் கேரளாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு