மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய வகுப்பு 12 கணிதப் பொதுத் தேர்வில் (மார்ச் 9, 2026) ஏற்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு வினாத்தாளில் அச்சிடப்பட்டிருந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்த மாணவர்கள், எதிர்பாராத வகையில் பிரிட்டிஷ் பாடகர் ரிக் ஆஸ்ட்லேயின் (Rick Astley) 1987ஆம் ஆண்டு வெளியான உலகப் புகழ்பெற்ற பாடலான "Never Gonna Give You Up" என்ற இசை வீடியோவை எதிர்கொண்டனர்.

இணையத்தில் பரவலாக 'ரிக்ரோல்' (Rickroll) என்று அழைக்கப்படும் இந்த இணைய நகைச்சுவை வீடியோ, QR குறியீடு மூலம் தானாகவே இயங்கி ஒலிபரப்பியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக CBSE தேர்வு வினாத்தாள்களில் QR குறியீடு தேர்வு தொடர்பான உறுதிப்படுத்தல், வழிகாட்டுதல் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இடம்பெறும். ஆனால் இம்முறை அது இணைய ட்ரோல் போன்ற வீடியோவுடன் இணைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: CBSE மாணவர்களே.. ரெடியா..!! நாளை தொடங்குகிறது 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு..!!
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் தங்கள் அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். "தேசிய அளவில் நடைபெறும் முக்கியத் தேர்வில் இத்தகைய பிழை ஏற்படுவது கல்வித்துறையின் தரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது" என பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்தனர். "இது வெறும் நகைச்சுவையல்ல; தேர்வு ஆவணங்களின் தரக் கட்டுப்பாட்டில் பெரும் குறைபாடு உள்ளது" என்று ஆசிரியர்கள் விமர்சித்தனர்.
சமூக ஊடகங்களில் மீம்கள், வீடியோக்கள், கருத்துகள் என பல்வேறு வகையில் இது வைரலாகியுள்ளது. சிலர் இதை வேடிக்கையாகக் கருதினாலும், பெரும்பாலானோர் இது தேர்வு நடைமுறையில் ஏற்பட்ட கடுமையான தவறு எனக் கருதுகின்றனர். QR குறியீடு எவ்வாறு இத்தகைய இணைப்புடன் சென்றது? இது தவறுதலா அல்லது யாரோ திட்டமிட்டு செய்ததா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் தேர்வு ஆவணங்களின் தயாரிப்பு, அச்சிடல், பாதுகாப்பு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தேர்வுத் தாள்களின் பாதுகாப்பில் எந்த மீறலும் இல்லை என்றும், இந்த விஷயம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றும் CBSE தெளிவுபடுத்தியுள்ளது.

"வினாத்தாள்கள் உண்மையானவை என்றும் அவற்றின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படவில்லை என்றும் வாரியத்தால் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள்களின் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் இப்போது தீர்க்கப்பட்டாலும், இந்த விஷயம் தீவிரமாகக் கருதப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!