சென்னை மாநகரில் பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் நோக்கில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் (சிஐடிஏ - குப்டா) உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய முயற்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘சென்னை ஒன்’ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் சென்னை மெட்ரோ ரயில், மின்சார ரயில் (எம்.ஆர்.டி.எஸ்) மற்றும் மாநகரப் பேருந்து சேவைகளுக்கான டிக்கெட்டுகளை எளிதாகப் பெற முடிகிறது.
சென்னை ஒன் செயலியின் மிக முக்கிய அம்சம், ஒரே இடத்தில் மூன்று வகை போக்குவரத்து சேவைகளுக்கும் டிக்கெட் புக் செய்யும் வசதியாகும். தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்த பயணத் திட்டமாகவோ பயணிகள் டிக்கெட்டுகளை வாங்கலாம். கியூஆர் குறியீட்டு அடிப்படையில் இயங்கும் இந்த டிக்கெட்டுகள், பயணத்தை மிகவும் வசதியாக்கியுள்ளன. தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் இந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மாநகரப் பேருந்துகளுக்கான மாதாந்திர பயண அட்டைகளும் (ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலானவை) இந்த செயலி வழியாக வழங்கப்படுகின்றன. பயணிகள் தங்கள் புகைப்படத்தையும், தேவையான தொகையையும் செயலியில் பதிவேற்றினால், அட்டை உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பழைய முறையில் அட்டை புதுப்பிக்கச் செல்ல வேண்டிய சிரமம் குறைந்துள்ளது. ஆனால், இந்த மாதாந்திர அட்டையைப் பயன்படுத்தும் போது, பேருந்தில் ஏறியவுடன் செயலியில் பயணிக்கும் பேருந்தின் எண்ணை (பஸ் எண்) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது.
இதையும் படிங்க: 1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!
ஒவ்வொரு பயணத்தின் போதும் இதைச் செய்வது பயணிகளுக்கு கடினமாக இருப்பதாகவும், நேர விரயமாக இருப்பதாகவும் பலரும் புகார் தெரிவித்தனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேர போக்குவரத்து நெரிசலில் இந்த பதிவு சிரமத்தை அதிகரித்தது. இந்த புகார்களை கவனத்தில் கொண்ட சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் (குப்டா), முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இனி மாதாந்திர பயண அட்டை பயன்படுத்துபவர்கள், பேருந்தில் ஏறிய பிறகு செயலியில் எந்த பதிவும் செய்யத் தேவையில்லை. அட்டையை செல்போனில் திறந்து கண்டக்டரிடம் காட்டினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கண்டக்டர் சரிபார்த்த பிறகு பயணம் தொடரலாம்.இந்த புதிய மாற்றம் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ஒரு சிறிய மாற்றம் ஆனால் பயண அனுபவத்தை மிகவும் எளிதாக்கியுள்ளது” என்று பல பயணிகள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சென்னை போன்ற பெருநகரத்தில் தினசரி பயணம் செய்பவர்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
இத்தகைய பயனர் நட்பு மாற்றங்கள் மூலம் சென்னை ஒன் செயலி மேலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும், சாலைப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் இது மேலும் ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!