சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த யாமினி, தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் செந்தில்நாதன், உடல் நலக்குறைவால் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தனது மகன் அரவிந்த், மகள் சௌமியா (வயது 10) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இதில் சௌமியா புரசைவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை மகளை பள்ளியில் விடுவதற்காக யாமினி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு, வாக்கின்ஸ் தெரு சந்திப்பு வழியாக அவர் சென்றபோது சாலையில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தில் இருசக்கர வாகனம் இறங்கி ஏறியதில் நிலைதடுமாறிய யாமினி, இடதுபுறமாக கீழே விழுந்தார். பின்னால் அமர்ந்திருந்த சௌமியா, வலதுபுறமாக சாலையில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சௌமியா மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த மகளின் உடலை பார்த்து தாய் கதறி அழுதது அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: #BREAKING கீ செயினில் மறைத்திருந்த மர்மம்... ஆரணியில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து...!
பின்னர் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பியம் போலீசார், தண்ணீர் லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (41) என்பவரை கைது செய்தனர். மேலும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சௌமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து போலீசார் தங்களது பணிகளை சரியாக செய்யாமல் அலட்சியமாக இருந்ததாலேயே இந்த விபத்து நடைபெற்றது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செம்பியம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமணியை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். உதவி கமிஷனர் சத்யமூர்த்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், லாரி ஏறி பள்ளி சிறுமி உயிரிழந்ததையடுத்து கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் காலை நேரம் மற்றும் பள்ளியில் இருந்து திரும்பும் மாலை நேரங்களில் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. பள்ளி தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரம் பள்ளிகளின் வாயிலில் காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்கள் வரை திருப்பி ஒப்படைக்கக்கூடாது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!