கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தங்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கக (DMS) வளாகத்தில் இன்று பிரம்மாண்ட முறையீட்டுப் போராட்டம் நடைபெற்றது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட தொகுப்பூதியச் செவிலியர்கள் கலந்துகொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
அரசு மருத்துவமனைகளில் இரவு பகலாக உழைத்தும் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகக் கண்ணீர் மல்கக் கூறிய செவிலியர்கள், தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தின் உருக்கமான காட்சியாக, செவிலியர் ஒருவர் தனது கைக்குழந்தையை ஏந்தியபடியே களத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.
இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு! நாடாளுமன்ற நுழைவாயில்கள் அதிரடியாக மூடல்!

பணி நிலவரம்: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 15,000 நிரந்தரச் செவிலியர்கள் பணியாற்றி வரும் நிலையில், 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட MRP (Medical Services Recruitment Board) தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 6,500-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியத்தில் மிகக் குறைந்த ஊதியத்திற்குப் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பணி நிரந்தரம் கோரிப் போராடிய போது, தற்போதைய தவெக அரசு த ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதியச் செவிலியர்கள் அனைவரும் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஆண்டுகள் பல கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் அனைத்துத் தொகுப்பூதியச் செவிலியர்களையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அதுவரை தங்களுக்குரிய ஊதிய உயர்வையும், காலமுறை ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும்.
இன்று காலை 8:00 மணி முதல் DMS வளாக முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கப் பெருமளவில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!