×
 

Facebook, Instagram விளம்பரங்களை நம்பாதீங்க! ஆபாச ஆப் பெயரில் ஆண்ட்ராய்டு போனுக்குள் புகும் ஆபத்து!

மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், cybercrime.gov.in இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.

புதுடெல்லி: ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஆபாச செயலிகள் என்ற பெயரில் ஊடுருவி, வங்கி மற்றும் யுபிஐ கணக்குகளில் இருந்து பணத்தை திருடும் புதிய வகை சைபர் மோசடி அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களில் வரும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்களை நம்பி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இந்த மோசடியின் செயல்முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாச உள்ளடக்கம் தொடர்பான விளம்பரங்களை சைபர் மோசடி கும்பல்கள் வெளியிடுகின்றன. அதில் ஆர்வம் காட்டி கிளிக் செய்யும் நபர்களை, குறிப்பிட்ட இணையதளங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே உள்ள செயலிகளை பதிவிறக்கம் செய்ய தூண்டுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி! மத்திய பிரதேசத்தில் 6 புகார்கள்! போலீஸ் விசாரணை தீவிரம்!

‘நைட் பிளே’, ‘ரீலுாப்’, ‘கிஸ்’, ‘விமோ’, ‘ரிவோ’, ‘நெக்ஸோ’, ‘விக்ஸா’ உள்ளிட்ட பெயர்களில் சந்தேகத்திற்கிடமான செயலிகள் பரவி வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிகளை நிறுவிய பிறகு, செல்போனின் முக்கிய வசதிகளை கட்டுப்படுத்தும் ‘Accessibility’ அனுமதியை கேட்கின்றன. அதை பயனர் வழங்கினால், பின்னணியில் செயல்படும் தீங்கிழைக்கும் மென்பொருள் மூலம் செல்போனின் கட்டுப்பாட்டை மோசடி கும்பல் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனருக்கு தெரியாமலேயே வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், செல்போனில் உள்ள முக்கியமான தகவல்களும் திருடப்படலாம். மேலும், ‘Update’ என்ற பெயரில் கூடுதல் மால்வேர் பதிவிறக்கம் செய்யப்பட்டு, சாதனத்தில் உள்ள தகவல்களை கைப்பற்றும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். அறிமுகமில்லாத செயலிகளுக்கு Accessibility அனுமதி வழங்கக்கூடாது. தேவையில்லாத அல்லது தெரியாத செயலிகள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

மேலும், கூகுள் பிளே புரொடெக்ட் பாதுகாப்பு வசதியை இயக்கி வைப்பதுடன், செல்போன் மென்பொருளையும் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும். வங்கி மற்றும் யுபிஐ கணக்குகளையும் அடிக்கடி சரிபார்ப்பது அவசியம்.

மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், cybercrime.gov.in இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.

இதையும் படிங்க: சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share