வீட்டை விற்க மறுத்த ஓனர்! அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!
வீட்டை விற்க மறுத்த பெண் பேராசிரியையை, அவரது வீட்டில் வாடகைக்கு வசித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வீடு விற்பனை தொடர்பான தகராறு காரணமாக, பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தேவஸ்மிதா பால் (49). மேற்கு வங்கத்தின் பர்த்வான் பகுதியைச் சேர்ந்த இவர், குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். டெல்லியின் புது அசோக் நகர் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 3ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சம்பவத்தன்று அவரை தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அவரது சகோதரி தேவரதி, மறுநாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தேவஸ்மிதா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிங்க: பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்! துண்டு துண்டாக வெட்டி, வீடியோ எடுத்த மனைவி! கள்ளக்காதலன் உடந்தை!
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு தம்பதி வீட்டுக்குள் நுழைவதும், சுமார் 30 நிமிடங்கள் கழித்து வேறு உடையில் வெளியேறுவதும் பதிவாகியிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட போலீசார், மேற்கு வங்கத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் வெளியான தகவலின்படி, தேவஸ்மிதாவுக்கு மேற்கு வங்கத்தில் சொந்தமாக இருந்த வீட்டில் இந்த தம்பதி வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அந்த வீட்டை தங்களுக்கு விற்குமாறு அவர்கள் பலமுறை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தேவஸ்மிதா அதற்கு சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த இருவரும் டெல்லி வந்து அவரை சந்தித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சொத்து தொடர்பான தகராறு கொடூரமான கொலையாக மாறிய இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட தம்பதியரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திடீரென ரெய்டு வந்த போலீஸ்! குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்!