பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை மறைமலைநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு: பொத்தேரி அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின்போது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் ஏராளமான தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெளியூர்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தனித்தனியாகவும், குழுக்களாகவும் வாடகை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் இன்று காலை சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: மேலூரில் அதிகாலையில் பயங்கரம்.. பள்ளி பின்புறம் இளைஞர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையின்போது, சுமார் 50 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசி மற்றும் பாங்கு உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது அங்கிருந்த சில மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மறைமலைநகர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை மறைமலைநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, மாணவர்களுக்கு அவற்றை யார் வழங்கியது, தொடர்ந்து சப்ளை செய்யும் நபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டவை மாணவர்களுக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
பொத்தேரி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீரென சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் முடிவில் போதைப்பொருட்களின் மூலாதாரம் மற்றும் இதன் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பயங்கரம்.. பட்டா கத்தியுடன் இளைஞர்களை விரட்டி வெட்டிய திமுக கவுன்சிலர் கணவர்!