சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அளித்த பேட்டியில், கடந்த காலத் தவறுகளை எடுத்துக்கூறுவது அவசியம். 1971 முதல் 1974ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்ட தவறுகளைக்கூட இன்று சரிசெய்ய 50 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இன்னும் சிலவற்றை சரிசெய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள், எதை விட்டுச் சென்றார்கள் என்பதை நாம் மக்களிடம் சொல்லித்தான் ஆக வேண்டும்.
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்படும் என்று கூறி, அதனை அமைத்து, கேவல் சிங் மூலம் சிபிஐ வழக்குத் தொடரப்படும் என்று மிரட்டியதன் காரணமாகத்தான் கட்சியை திமுக தாரை வார்த்ததாக கூறப்படுகிறது. அதையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இதையும் படிங்க: இயன்முறை மருத்துவம்... நிரந்தர பணியிடங்கள் தேவை... வேல்முருகன் வலியுறுத்தல்.!!
இன்று மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், கச்சத்தீவு விவகாரத்தில் நீங்கள் செய்தது தவறு இல்லையா? எதற்காக கச்சத்தீவை தாரைவார்த்தீர்கள்? இந்த விவகாரம் குறித்து உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா?
கேவல் சிங் உங்களிடம் இரண்டு முறை இது தொடர்பாக விவாதித்ததாகக் கூறியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, நீங்கள் செய்த தவறு என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?
இதேபோல், காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலும் அவர்கள் செய்த தவறுகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
ரத்தீஷ் விவகாரம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், இன்று டாஸ்மாக் தொடர்பாக ரூபாய் அளவில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் கூறுகிறீர்கள். அந்த அமைப்பை யார் கொண்டு வந்தார்கள்? அதை யார் வசூல் செய்தார்கள்? பவர் புரோக்கராக இருந்த ரத்தீஷின் பெயர் அமலாக்கத்துறை ஆவணங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் மறைத்த விஷயங்களையும், அவர்கள் செய்த தவறுகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அரசு என்பது ஒரு தனிநபரால் நடத்தப்படக் கூடாது. முதலமைச்சர், அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்தான் அரசின் நிர்வாகத்தை நடத்த வேண்டும்.
ஆனால், ரத்தீஷ் என்ற ஒரு நபரும், அவருடன் தொடர்புடைய சில நபர்களும் சேர்ந்து அரசை நடத்துவது போன்ற நிலை இருக்கக்கூடாது. ரத்தீஷ் பல்வேறு துறைகளில் அதிகாரிகளைச் சந்தித்து, அமைச்சர்களைச் சந்தித்து, பல துறைகளைப் பிரித்துக்கொண்டு வசூல் செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ரத்தீஷுக்கு அரசியல் தெரியுமா? மக்களைப் பற்றி தெரியுமா? மக்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறாரா? எதுவும் தெரியாத நிலையில், சில நபர்கள் சேர்ந்து அரசையே இயக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.
டாஸ்மாக் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள், டாஸ்மாக்கில் என்ன நடக்கிறது என்பது குறித்தெல்லாம் தெரியாமல், வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ரத்தீஷ் போன்ற பவர் புரோக்கர்களை வைத்து அரசு இயக்கப்பட்டதாக மக்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.
இதனால்தான் அந்த அரசு இந்த நிலைக்கு சென்றது. அந்த அமைப்பை நாம் மறுபரிசீலனை செய்து, அதிலிருந்து மாற்றத்தை கொண்டு வருகிறோம். சீரழிந்து கிடக்கும் அனைத்து அமைப்புகளையும் மாற்றி அமைக்கிறோம் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
கடந்த காலத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்,
இதற்கு முன்னர் அரசு எப்படி செயல்பட்டது? யார் யார் அரசு நிர்வாகத்தில் தலையிட்டார்கள்? எதற்காக ரத்தீஷ் போன்ற ஒருவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்? அவர் மீது ஏன் குற்றச்சாட்டுகள் எழுகின்றன? என்பதையெல்லாம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது.
ரத்தீஷ், உதயநிதி ஸ்டாலினுடன் 24 மணி நேரமும் இருந்த நபர் என்றும், அவர் பல்வேறு துறைகளில் பவர் புரோக்கராக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் நாம் சொல்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியாது. ஏற்கனவே அவர்மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு லுக்-அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எந்த வழக்கிலும் சட்டப்படியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். காவல்துறையும், தொடர்புடைய விசாரணை அமைப்புகளும் தங்களுடைய நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: வெற்று விளம்பரங்களை விட நெற்பயிர்கள் முக்கியம்... நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.!