தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்பத்தூர் தொகுதியில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாமகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்.
இந்தத் தேர்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள அவர், 30 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்தக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ‘சிலிண்டர்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், அம்பத்தூர் தொகுதியில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.ஆறுமுகத்துக்கும் ‘சிலிண்டர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் தனது பிரசாரத்தில் சிலிண்டர் சின்னத்தைப் பயன்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு குறையும் கூட்டம்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்! மருமகன் சபரீசனை களமிறக்கிய மு.க.ஸ்டாலின்!!
ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு அம்பத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் அம்பத்தூர் நகராட்சி முன்னாள் தலைவர் கே.என்.சேகர் போட்டியிடுகிறார்.

அம்பத்தூர் தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களில் ராமதாஸ் ஆதரவாளர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இதனால், ‘சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிடும் எம்.எஸ்.ஆறுமுகத்துக்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் வாக்குகளைப் பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் பாமகவினரிடையே ஏற்பட்டுள்ளது. பாமகவினர் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்க தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
ராமதாஸ் தரப்பும் தங்கள் ஆதரவாளர்களை தெளிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், அம்பத்தூர் தொகுதியில் சிலிண்டர் சின்னம் சார்ந்த குழப்பம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் பாமகவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலையிட்டும் தீராத பிரச்னை! கருணாஸ் கண்ணீர்! கழட்டிவிட்ட திமுக நிர்வாகிகள்!