நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த முக்கியமான தேசியப் பணி, கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021-ல் தள்ளிப்போடப்பட்டது. தற்போது, நடப்பு 2026-ம் ஆண்டில் சென்சஸ் கணக்கெடுப்பு முழு வீச்சில் தொடங்க உள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் சென்சஸ் ஆணையாளர் மிருதுஞ்சய் குமார் நாராயண், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அறிவித்தார். அவர் கூறியதாவது: “மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழு அளவில் தயாராகி வருகின்றன. இந்த சென்சஸ் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டப் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும்.
இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்” என்றார்.இந்த முறை சென்சஸ் தரவுகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும் என்பது முக்கிய அம்சமாகும். மொபைல் அல்லது டேப்லெட் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்படும். இதனால் தரவு சேகரிப்பு வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக துண்டால் முகத்தை மூடி ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறிய இளைஞர்கள்... விஜய் பரப்புரையில் பரபரப்பு..!!

சென்சஸ் சட்டத்தின் பிரிவு 15-ன் கீழ், ஒவ்வொரு தனி நபரின் தகவல்களும் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். இந்தத் தகவல்கள் எந்தச் சூழலிலும் வெளியிடப்பட மாட்டா. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்கூட இந்தத் தனிப்பட்ட விவரங்களைப் பெற முடியாது என்று ஆணையாளர் வலியுறுத்தினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இது 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். இந்தப் பணியை வெற்றிகரமாக மேற்கொள்ள மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் அடிமட்ட அளவில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க உள்ளனர்.
களப்பணிகளை சரியாக முடிக்க முழு அரசு இயந்திரமும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் நாட்டின் எதிர்கால திட்டமிடலுக்கு மிகவும் அவசியமானவை. இதன் மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான கொள்கைகள் வகுக்கப்படும். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக மாற்றங்கள், நகரமயமாக்கல் போன்றவற்றை அறியவும் இந்தத் தரவுகள் உதவும்.
இந்த சென்சஸ் மூலம் இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை, பாலின விகிதம், கல்வியறிவு விகிதம், வயது வாரியான பகுப்பாய்வு, தொழில் நிலை உள்ளிட்ட முக்கிய புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படும். இது அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை இலக்கு நோக்கி செலுத்த உதவும். மக்கள் அனைவரும் சென்சஸ் பணியில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆணையாளர் மிருதுஞ்சய் குமார் நாராயண் கேட்டுக்கொண்டார். சரியான தகவல்களை வழங்கினால் மட்டுமே நாட்டின் உண்மையான முன்னேற்றத்துக்கு உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஏப்., 7ல் போர் நிறுத்தம்!! பேச்சுவார்த்தைக்கு சம்மதம்!! அமெரிக்க, இஸ்ரேல் போரில் இறங்கி வரும் ஈரான்!!