பெங்களூரு: கர்நாடகாவின் 24-வது முதலமைச்சராக டி.கே. சிவகுமார் நேற்று பதவியேற்றுக் கொண்டார். 2023 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு போடப்பட்ட ஒப்பந்தப்படி, ஆட்சியின் முதல் பாதியில் முதல்வராக இருந்த சித்தராமையா, நீண்ட இழுபறிக்குப் பிறகு தனது பதவியை விட்டுக்கொடுத்தார்.
டி.கே. சிவகுமாருடன் 12 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். தலித் சமூகத்தின் முக்கிய தலைவரான ஜி. பரமேஸ்வரா துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அமைச்சரவையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் செல்வாக்கு அதிகம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் பலருக்கும், அவரது மகன் யதீந்திர சித்தராமையாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு தலா 3 இடங்களும், பட்டியல் சாதியினருக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. குருபா சமூகத்துக்கு 2 இடங்களும், பழங்குடியினர், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சரின் செயலராக தமிழர் நியமனம்! யார் இந்த ராஜேந்திர சோழன்!

மேலவை உறுப்பினர் பி.கே. ஹரிபிரசாத் கர்நாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அமைச்சரவையின் மொத்த அனுமதிக்கப்பட்ட பலம் 34 ஆகும். வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.கே. சிவகுமார் பதவியேற்ற சம்பவம் கர்நாடக காங்கிரஸுக்குள் நீண்டகாலமாக நிலவிய உள் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. சித்தராமையா - சிவகுமார் இடையேயான சமரசம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை, சமூக சமன்பாட்டை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய முதல்வர் டி.கே. சிவகுமார் தனது பதவியேற்பு விழாவில் பல்வேறு நலத்திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த உறுதியளித்துள்ளார். குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் விஜய்க்கு 3வது இடம்! முதலிடம் யார் தெரியுமா? சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?