காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை அரசு உடனடியாகக் கொள்முதல் செய்யாததால், அவை திறந்தவெளியிலும் சாலை ஓரங்களிலும் மழையில் நனைந்து அழுகி முளைத்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு இனியும் மெத்தனமாக இராமல் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதலைத் தொடங்கி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாகத் தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட நெற்களஞ்சியப் பகுதிகளில் உழவர்களிடமிருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
இதனால், இரவும் பகலும் பாடுபட்டு அறுவடை செய்யப்பட்ட டன் கணக்கிலான நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியேயும், சாலை ஓரங்களிலும், திறந்தவெளிகளிலும் பாதுகாப்பற்ற முறையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரக்ஷாபந்தன் வாழ்த்து சொன்ன பிரேமலதா...! சட்டென சபாநாயகர் கொடுத்த ரியாக்ஷன்..! சட்டப்பேரவையில் கலகல..!
தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் கனமழையில் நனைந்து நனைந்து, முளைத்து அழுகிப் பெரும் சேதத்திற்கு உள்ளாகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்துப் பேசிய அவர், திருவாரூர் மாவட்டத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, வயல்களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன.
இதனால், தங்களது ஒட்டுமொத்த உழைப்பையும் முதலீட்டையும் பயிர்களிலேயே கொட்டிவிட்டு வாழும் எளிய விவசாயப் பெருமக்கள் மீள முடியாத கடுமையான பொருளாதார இழப்பைச் சந்திக்கும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.
மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய பயிர் இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளைத் தமிழ்நாடு அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக முழுமையாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன்வைத்த பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளிடம் தேங்கிக் கிடக்கும் நெல்லை அரசு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.
திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான நவீன சேமிப்புக் கிடங்குகளுக்கு உடனே மாற்ற வேண்டும். அதுவரை மழையால் நெல் சேதமடையாமல் தடுக்க தார்ப்பாய் உள்ளிட்ட தற்காலிகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகமே போர்க்கால அடிப்படையில் போர்க்களப் பணிகளைப் போலச் செய்து முடிக்க வேண்டும்.
மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணப் பட்டுவாடாவை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் எவ்விதக் காலதாமதமும் இன்றி உடனடியாக வரவு வைக்க வேண்டும். உழவர்களின் உழைப்பை அலட்சியப்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியது ஓர் அரசின் தலையாய கடமையாகும்; எனவே தமிழ்நாடு அரசு இனியும் காலங்கடத்தாமல் உடனடியாக களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: FCRA, நீட், தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானங்கள்..! முதல்வருக்கு நன்றி... பேரவையில் பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!!