தமிழக அரசியல் வட்டாரத்தில் இன்று நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றமாக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் (Rajya Sabha), தேமுதிக-விற்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் திமுக தரப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், தேமுதிக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷும் கையெழுத்திட்டனர்.

2026 மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக-விற்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்யத் திமுக முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்
இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!
அந்த ஒரு இடத்திற்கு தேமுதிக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, "கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரிய நேரத்தில் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" என சுதீஷ் பதிலளித்தார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உயிருடன் இருந்தபோதே, 2016-ல் இத்தகையதொருக் கூட்டணி அமைய வேண்டும் என விரும்பினார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அது நிறைவேறியுள்ளது" என சுதீஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து, இரு கட்சிகளின் குழுக்களும் விரைவில் அமர்ந்து பேசி முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியின் மூலம் வட தமிழகம் மற்றும் நகர்ப்புறங்களில் தேமுதிக-வின் வாக்கு வங்கி திமுகவிற்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!