சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த தி.மு.க., இளம் வாக்காளர்களை கவரும் வகையில் புதிய அணிகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. கட்சியின் மறுசீரமைப்புக் குழு இதுதொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்டோர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டு வர மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. லண்டன் பயணத்துக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் இக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். தற்போதும் குழு தொடர்ந்து கூடி விவாதித்து வருகிறது.
இதையும் படிங்க: திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!
இளைஞர்களை கட்சியில் ஈர்க்கும் வகையில் பல புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இளம் டாக்டர்கள் அணி, இளம் பொறியாளர்கள் அணி, இளம் ஆசிரியர்கள் அணி, இளம் வழக்கறிஞர்கள் அணி உள்ளிட்ட தனித்தனி அணிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு சிறப்பு அரசியல் பயிற்சி முகாம்கள் நடத்தி, அவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு தயார் செய்ய உள்ளதாக தெரிகிறது.

மேலும் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை திருப்திப்படுத்தும் வகையில் புதிய பதவிகளும் உருவாக்கப்பட உள்ளன. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என்ற அடிப்படையில் புதிய மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பதவி கிடைக்காதவர்களுக்கு தொகுதி செயலர் என்ற புதிய பதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளில் பெரும்பாலானவை இளைஞரணியினருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெகவின் வெற்றியைத் தொடர்ந்து தி.மு.க., தன்னை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இளம் தலைமுறையினரை ஈர்க்கும் இந்த நடவடிக்கைகள் கட்சியின் எதிர்காலத்துக்கு பலம் சேர்க்கும் என கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன. மறுசீரமைப்புக் குழு விரைவில் இறுதி பரிந்துரைகளை தலைமைக்கு சமர்ப்பிக்க உள்ளது.
தி.மு.க.,வில் இந்த மாற்றங்கள் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அரசியல் சூழலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த விக்கெட்! ஓசூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!