பா.ஜ. முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பா.ஜ. வேட்பாளரும் மத்திய அமைச்சருமான முருகனை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாமலை பேசுகையில், “ஒரு சிட்டிங் மத்திய அமைச்சர் அவிநாசி தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். இது மக்களுக்கு பெரிய வாய்ப்பு. அவிநாசி அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை. எனவே இங்கு சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் முருகன் வெற்றி பெற வேண்டும். அவரை ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வளர்ச்சியும் இல்லை. சிலிண்டர் மானியம், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தி.மு.க.வின் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இதையும் படிங்க: வந்தவன், போனவனை நம்புற?! என்னை நம்ப மாட்டியா? கோவில்பட்டியில் கொந்தளித்த சீமான்!!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 8,008 படுகொலைகள், 2,080 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 39,900 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வளவு குற்றங்கள் நடக்கும்போது சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்று முதல்வர் எப்படி சொல்ல முடியும்?

தி.மு.க. அரசு மது விற்பனையை ஊக்குவித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 403 புதிய தனியார் பார் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் 110 எப்.எல்.2 பார் அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சிதான் தமிழக வரலாற்றில் மிக மோசமான ஆட்சி” என்று தாக்குதல் தொடுத்தார்.
அவிநாசியில் முருகன் வெற்றி பெற்றால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் குறைகளை நீக்கி முழுமைப்படுத்தப்படும் என்றும் அண்ணாமலை உறுதியளித்தார்.
திருப்பூரில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அண்ணாமலை, தி.மு.க.வின் திருப்பூர் தெற்கு வேட்பாளர் தினேஷ்குமாரை ‘குட்டி செந்தில் பாலாஜி’ என்று விமர்சித்தார். திருப்பூரை ‘டாலர் சிட்டி’யிலிருந்து ‘குப்பை சிட்டி’யாக மாற்றியதே அவரது சாதனை என்று கூறினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் 2021 முதல் மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைப்பிடிப்பதாகவும், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி பெறும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஆசிர்வாதம் வாங்குனேன்!! அதில் தப்பில்லையே!! தமிழரின் பண்பு என எடப்பாடி பழனிசாமி விளக்கம்!