சென்னை: மக்கள் நலனுக்கு எதிரான “ரீல்ஸ் அரசியல்” மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, மாநிலத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அண்ணாதுரையின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த உறுதிமொழியை முன்வைத்துள்ளார்.
அண்ணாதுரை தமிழக அரசியலில் மட்டுமின்றி, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் மாநில உரிமைகள் போன்ற கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த தலைவராக திகழ்ந்தவர் என்று இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். அதிகாரத்தைவிட கொள்கைக்கும், பதவியைவிட மக்களுக்கும், தனிமனிதப் புகழைவிட சமூக முன்னேற்றத்திற்கும் அவர் முக்கியத்துவம் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாதுரையின் அரசியல் வாழ்க்கை தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ள இபிஎஸ், தமிழினத்தின் தன்மானக் குரலாகவும், அதிமுகவின் கொள்கை அடையாளமாகவும் அவர் தொடர்ந்து இருப்பதாக கூறியுள்ளார். அவரது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் ஆட்டத்தை ஆரம்பித்த இபிஎஸ்... அதி முக்கிய அரசியல் புள்ளியுடன் இன்று சந்திப்பு... ஆதரவு கோர திட்டம்...!

இதைத்தொடர்ந்து தற்போதைய தமிழக அரசியல் சூழலை சுட்டிக்காட்டிய இபிஎஸ், மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான “ரீல்ஸ் அரசியல்” மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் அண்ணாயிசம் ஆட்சியை மீண்டும் நிறுவுவதற்கு அண்ணாதுரை பிறந்தநாளில் உறுதியேற்போம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தின் அரசியல் இலக்கணத்தை எழுதியவர் அண்ணாதுரை என்றும், “தலைநிமிர்ந்த தமிழர், தலைநிமிர்ந்த தமிழ்நாடு” என்ற இலட்சியத்தை நனவாக்கிய மாபெரும் தமிழ்க் கனவு அவர் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமை மற்றும் தமிழ்ப்பற்று ஆகியவற்றில் அண்ணாதுரை என்றென்றும் வாழ்வார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு ஒருபுறம் திமுகவும், மறுபுறம் அதிமுகவும் அவருடைய கொள்கைகளை முன்னிறுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், இபிஎஸ் முன்வைத்துள்ள “அண்ணாயிசம் ஆட்சி” என்ற அரசியல் முழக்கம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!