தமிழகச் சட்டமன்றத் தேர்தலை (ஏப்ரல் 23, 2026) முன்னிட்டு, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை இன்று தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் சொந்த மண்ணான திருவாரூரில் இருந்து தொடங்கினார். திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 4 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் கிளைச் செயலாளர் என்று விமர்சித்த முதலமைச்சர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அவர் பேசுவது வெறும் "புலம்பல்" மட்டுமே என்று சாடினார். தமிழகம் எல்லாத் துறைகளிலும் 'டாப்' இடத்தில் இருப்பது பாஜக-விற்கும் அதன் 'அடிமை' கூட்டத்திற்கும் எரிச்சலை உண்டாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தித் திணிப்பைத் தமிழ்நாடு ஏற்கவில்லை என்பதற்காக, நம் வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்குத் தர வேண்டிய நிதியைக் கூட ஒதுக்காமல் வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு, என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், இப்படியொரு வஞ்சகக் கூட்டத்திடம் தமிழ்நாட்டை ஒப்படைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை ஓட வைத்தவர் கலைஞர் என்பதை நினைவு கூர்ந்த அவர், தமிழகத்தின் வளர்ச்சி தொடர திமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! டி-ஷர்ட் வாசகத்தை காட்டி எடப்பாடியார் திமுக-வை விளாசல்!
திமுக அரசின் திட்டங்களிலேயே 'மகளிர் உரிமைத் தொகை' தான் மிகப்பெரிய 'Trendsetter' என்று குறிப்பிட்ட முதலமைச்சர், "இந்தத் திட்டத்தை நிறுத்த பாஜக பல முயற்சிகளைச் செய்தது. யார் வயிறு எரிந்தாலும் மக்கள் மனசு நிறைய வேண்டும் என்பதே என் லட்சியம். அதனால்தான் பிப்ரவரி மாதம் ₹5,000 வழங்கினோம்," என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பல்வேறு வதந்திகளைப் பரப்பிய எதிர்க்கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்றும், தற்போது அவதூறு பரப்பியதால் அவர்கள் அசிங்கப்பட்டு நிற்பதாகவும் ஸ்டாலின் பேசினார். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுத் தமிழ்நாட்டைக் காக்க திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: கொள்கை உறவு... வெற்றி கூட்டணி! கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!