தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மதுரை மாநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை மாநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான தயாரிப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு எதிரான அதிருப்தி அணியின் அடுத்த மூவ்! அதிமுகவில் அரசியல் கணக்கு! பரபரப்பு தகவல்!
முதற்கட்டமாக, மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும் பங்கேற்றுள்ளார்.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை, அங்குள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்தது. முன்னாள் அமைச்சர்கள் இருவர் இருந்த மாவட்டமாக இருந்தபோதிலும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன? எந்த பகுதிகளில் என்னென்ன குறைபாடுகள் ஏற்பட்டன? எதிர்காலத்தில் அவற்றை எவ்வாறு சரிசெய்வது? என்பது குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி, இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், "உள்ளாட்சித் தேர்தலில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். நம்பிக்கையுடன் கட்சிப் பணியாற்றுங்கள். உறுதியுடன் செயல்படுங்கள். கட்சியை விட்டு பிரிந்தவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம்" என்று நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகிகளும் தங்களது மாவட்டங்களில் நிலவும் சூழல், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சி வளர்ச்சிக்கான பரிந்துரைகள் குறித்து பொதுச்செயலாளரிடம் நேரடியாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதன் மூலம், தேர்தல் தோல்விக்கான காரணங்களை முழுமையாக ஆய்வு செய்து, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை வகுக்கும் பணியில் அதிமுக தலைமையகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: "எடப்பாடி பழனிசாமியின் 5 நாள் ஆலோசனை... அதிமுகவில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்?"