அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த ஒன்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஒரு தனியார் ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.23 கோடி மதிப்பிலான முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகத்துறை அமைச்சராக இருந்த ஏ.வ. வேலு, ஒன்பது அரசு அதிகாரிகள் மற்றும் ஒரு தனியார் ஒப்பந்ததாரர் என மொத்தம் 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, இன்று தமிழகம் முழுவதும் 20 இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
காலை முதல் நடைபெற்று வரும் இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சொத்து மதிப்பு மற்றும் முறைகேட்டை உறுதிப்படுத்தும் வகையிலான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே திமுக தலையில் இறங்கியது பேரிடி... முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை...!
அந்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக அரப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் கீழ் சாலைகளை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக “சங்கரானந்தா இன்ஃப்ரா” என்ற தனியார் நிறுவனத்திற்கு சுமார் ₹7 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருந்தபோதும், பணம் வழங்கப்பட்டதாகவும், இதில் கூட்டுச் சதி நடைபெற்றுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
சாலைகளை அமைக்காமல் சுமார் ₹23 கோடி வரை பொதுமக்களின் வரிப்பணம் முறைகேடாக கையாளப்பட்டதாகவும், அதன்மூலம் அரசு நிதி அபகரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அரசு நிதியை முறைகேடாக பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கூட்டுச் சதி, அரசு நிதி மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரின் வீடுகள், அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் இருப்பிடங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் சென்னை – 4 இடங்கள், திருவண்ணாமலை – 4 இடங்கள், கரூர் – 7 இடங்கள், திண்டுக்கல் – 2 இடங்கள், கோவை – 2 இடங்கள் மற்றும் திருப்பூர் – 1 இடம் என மொத்தம் 20 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன.
இந்த சோதனைகளின் போது நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், சொத்து விவரங்கள் மற்றும் முறைகேட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு ஆதார ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் அதிரடி மாற்றம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி!