இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தியாவின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave - CSC) அமைப்பு, இனி 'சர்வதேச அமைப்பாக' மாற்றப்பட உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை ஒரு பிராந்திய ஒத்துழைப்பு தளமாகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பிற்கு, இனி சர்வதேச சட்ட அந்தஸ்து மற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், கடல்சார் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடல் எல்லைப் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் உறுப்பு நாடுகளிடையே இன்னும் வலுவான சட்டப்பூர்வமான ஒத்துழைப்பு ஏற்படும்.
இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மொரிஷியஸ், வங்கதேசம் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் முக்கிய அங்கங்களாக உள்ளன. சர்வதேச அமைப்பாக மாற்றப்பட்ட பிறகு, இந்த அமைப்பின் நிர்வாகத்தை வழிநடத்த ஒரு பொதுச்செயலாளர் நியமிக்கப்பட உள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் தொகுதி மறு வரையறை பிரச்சனை..! சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு..!!
கொழும்பு பாதுகாப்பு மாநாடு அமைப்பின் முதல் பொதுச்செயலாளராக இந்தியர் ஒருவரே பதவியேற்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் தலைமைத்துவத்தையும், ராஜீய செல்வாக்கையும் உலக அரங்கில் மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, காலப்போக்கில் மற்ற அண்டை நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தது. கடல்சார் பாதுகாப்பு, மனிதக் கடத்தல் தடுப்பு, பேரிடர் மேலாண்மை, இணையப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய ஐந்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒரு ஒருங்கிணைந்த சட்டதிட்டத்தை உருவாக்குவதில் இந்த புதிய மாற்றம் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லடாக், அசாம்.., இந்தியாவில் ஒரே நாளில் 3 இடங்களில் நிலநடுக்கம்..!! பீதியில் உறைந்த மக்கள்..!!