ஈரானின் தொடர் தாக்குதலால் பலத்த சேதம்!! மூடப்பட்டது சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
ஈரானின் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள 'அராம்கோ' நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் பதிலடி தாக்குதல்கள் எண்ணெய் உள்கட்டமைப்புகளை குறிவைத்துள்ளன. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபியாவின் ராஸ் தானுராவில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஈரானிய ட்ரோன் தாக்குதலுக்கு ஆளானது.
நேற்று (மார்ச் 2, 2026) நடந்த இத்தாக்குதலில், இரண்டு ஈரானிய ட்ரோன்கள் நிலையத்தை நோக்கி சென்றன. சவுதி பாதுகாப்பு படைகள் அவற்றை இடைமறித்து அழித்தன. ஆனால், வீழ்ந்த ட்ரோன் இடிபாடுகளால் சிறிய தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: Reckless attack! பொறுப்பற்ற தாக்குதல் ஏன்? ஈரானை கண்டிக்கும் மேற்காசிய நாடுகள்!
இத்தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. உயிரிழப்புகள் இல்லை என்று சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சேத மதிப்பீட்டுக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் 5.5 லட்சம் பேரல் திறன் கொண்ட ராஸ் தானுரா சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது சவுதியின் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பில் மிக முக்கியமானது மட்டுமல்ல, கச்சா எண்ணெய் ஏற்றுமதி துறைமுகத்துடன் இணைந்துள்ளது.
அராம்கோ நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. ஆனால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் தாக்குதலுக்குப் பிந்தைய நிலையை காட்டுகின்றன - புகை மண்டலம் மற்றும் சிறிய சேதங்கள் தெரிகின்றன. இத்தாக்குதல் உலக எண்ணெய் சந்தையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து பாதிப்பு, கத்தார் LNG உற்பத்தி நிறுத்தம், இஸ்ரேல் எரிவாயு வயல்கள் மூடல் ஆகியவற்றால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்னும் இந்த சுத்திகரிப்பு நிலைய மூடல் நீடித்தால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இரண்டாவது நாளாக தொடரும் ஈரான் தாக்குதல்கள் வளைகுடா நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஈரானின் தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா தனது குடிமக்களை 14 நாடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.
இந்தியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. போர் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை பாதித்தால், உலக பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும். மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என உலக நாடுகள் அழைப்பு விடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: UAE-ல் தாண்டவமாடும் ஈரான்!! அமீரகத்தில் விழுந்த 708 குண்டுகள்!! இரக்கம் காட்டாமல் ஈரான் தாக்குவதால் அதிர்ச்சி!