இந்தியாவில் வீழ்ச்சி.. பாகிஸ்தானில் ஏற்றம்! இதுல மட்டும் அவங்க முந்த முடியும்! எதுல தெரியுமா?
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களால் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது என உலக வங்கி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் யார்? என்ன அளவுகோல் மூலம் இது வரையறுக்கப்படுகிறது? 2021ம் ஆண்டின் விலைவாசிகள் அடிப்படையில் ஒரு நாளைக்கு 3 அமெரிக்க டாலருக்கு கீழே வாங்கும் திறன் உடையவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் என உலக வங்கி வரையறுக்கிறது.
3 டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 257 ரூபாய். அந்த அடிப்படையில் பார்த்தால், 2012ம் ஆண்டில் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தவர்களின் விகிதாச்சாரம் 27.1% ஆக இருந்தது. அது, 2023ம் ஆண்டில் 5.3% ஆக குறைத்துள்ளது என உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 2012ல் வறுமைக்கோட்டுக்கு கீழே வாடியவர்களின் எண்ணிக்கை 35.5 கோடியாக இருந்தது.
2023ல் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக குறைந்தது. அதாவது, 2012 முதல் 2023 வரையிலான 11 ஆண்டுகளில் 27 கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டனர் என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் வறுமைக்கோட்டின் பிடியில் இருந்து வேகமாக விடுபடுகின்றனர். 2012ல் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை 18.4 சதவீதமாக இருந்தது.
இதையும் படிங்க: பயிரெல்லாம் காயுது! தயவு செஞ்சு தண்ணி கொடுங்க! ஒரு மாதத்தில் 3 கடிதம் எழுதி கெஞ்சும் பாக்.,
அது, 2023ல் 2.8% ஆக குறைந்தது. நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டில் இருந்தவர்கள் எண்ணிக்கை 2012ல் 10.7% ஆக இருந்தது. அது 2023ல் 1.1% ஆக குறைந்தது. 2012ல் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வசித்தவர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகமாக இருந்தது. அந்த வித்தியாசம் தற்போது, 1.7 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியா பொருளாதாரரீதியாக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
2014ல் இந்தியா 10வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. இப்போது நான்காவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இந்தியா பல துறைகளில் அடைந்த வளர்ச்சியின் நன்மைகள் ஏழை மக்களையும் சென்றடைந்துள்ளது என்பதையே வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை சரிந்ததற்கு காரணமாக, உலக வங்கி தெரிவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களால் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது என உலக வங்கி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், அத்தியாவசிய சேவைகள் ஏழைகளுக்கு கிடைப்பதில் ஏற்பட்ட முன்னேற்றமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறுக்க முடியாது. 2012ல் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்த 35.5 கோடி பேரில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பங்கு 65 சதவீதமாக இருந்தது. அதாவது, நாட்டிலுள்ள மொத்த ஏழைகளில் மூன்றில் 2 பேர் இந்த 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
அம்மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் கடந்த 11 ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் அடைந்த முன்னேற்றமே, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. சுருக்கமாக சொல்வதானால், ஏழைகளின் எண்ணிக்கை குறைப்பில் இந்தியா பெற்ற வெற்றிக்கு இந்த 5 மாநிலங்கள்தான் அதிக பங்களிப்பை அளித்துள்ளன என உலக வங்கி தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமாக உள்ளது என, இரு தினங்களுக்கு முன் உலக வங்கி அறிக்கை வெளியிட்டது. அதாவது, அந்நாட்டின் 25 கோடி மக்கள் தொகையில் சுமார் 10 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டிலுமே ஒரு நாளைக்கு 3 டாலர் அளவுக்கு வாங்கும் சக்தியை அடிப்படையாக கொண்டே வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,