இயேசுவை அவமதிப்பதா..?? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது..!! டிரம்புக்கு எதிராக கொந்தளித்த ஈரான் அதிபர்..!!
போப் லியோவை விமர்சித்த டிரம்பை சாடி ஈரான் அதிபர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், பிராந்தியத்தில் பதிலடி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ச்சியான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தப் போர் சூழலுக்கு மத்தியில், உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ XIV, வாடிகனில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர், உலகில் நிலவும் போர்களுக்கு எதிராக கடுமையான குரல் எழுப்பினார். "போர்கள் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும்; நம்பிக்கையும் அன்பும் தான் அனைவரையும் இணைக்கும். தற்பெருமை, பணம், வலிமை ஆகியவற்றை வெளிப்படுத்தியது போதும். முட்டாள்தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வர வேண்டும். போர்களை உடனடியாக நிறுத்துங்கள். இது அமைதிக்கான நேரம். ஆயுதங்கள் மற்றும் மரணங்களைத் திட்டமிடும் மேஜைகளில் அமராமல், பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தத்தின் மூலம் தீர்வு காணுங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த அமைதி வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போப் லியோவை கடுமையாக விமர்சித்தார். தனது சமூக ஊடகப் பக்கத்தில், தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உருவாக்கிய புகைப்படத்தை வெளியிட்டார். மேலும், "போப் பதினான்காம் லியோவை எனக்குப் பிடிக்கவில்லை. அவர் ஒரு ஆன்மீகத் தலைவரைப் போல இல்லாமல், இடதுசாரி அரசியல்வாதியைப் போல நடந்துகொள்கிறார். ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அவர் மறைமுகமாக ஆதரிக்கிறார்.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அவர் ஒருபோதும் போப்பாக ஆகியிருக்க மாட்டார்" என்று கூறினார். இந்த விமர்சனத்துக்கு உடனடி பதிலடி கொடுத்த போப் லியோ, "டிரம்ப் நிர்வாகத்துக்கோ, உண்மையைப் பேசுவதற்கோ நான் அஞ்சவில்லை. தாக்குதல்கள் மற்றும் போர்களுக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெகியன், டிரம்பின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகப் பக்கத்தில், "மேன்மைமிகு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களே, மாபெரும் ஈரான் தேசத்தின் சார்பில், உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தின் இறைத்தூதரான இயேசுவை அவமதிப்பது எந்த சுதந்திரமான மனிதனுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அல்லாவின் பெயரால் உங்களுக்கு மகிமை உண்டாகட்டும்" என்று பதிவிட்டார்.
டிரம்ப் வெளியிட்ட ஏஐ புகைப்படம் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியதால், அந்தப் படத்தை அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இந்தச் சம்பவம், அமெரிக்க அதிபர் மற்றும் வாடிகன் தலைவர் இடையேயான மோதலை உலக அளவில் பேசுபொருளாக்கியுள்ளது. போருக்கு எதிரான போப்பின் அழைப்பும், அதற்கான டிரம்பின் எதிர்வினையும், ஈரான் அதிபரின் தலையீடும் சர்வதேச அரசியல் மற்றும் மத உறவுகளில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சர்ச்சை, உலக அமைதிக்கான முயற்சிகள் மற்றும் அரசியல்-மதத் தலைவர்களின் பொறுப்புகள் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!