×
 

ஒருவழியாக ஓய்ந்தது சண்டை! இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்? ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இஸ்ரேல் ஈரான் இடையே 10 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அந்நாட்டின் கவனம் ஈரான் மீது திரும்பியது. ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக கூறி திடீரென கடந்த வாரம் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த ஜூன் 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் மீது ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3 என்ற பெயரில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.

இதனால் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலும் உள்ளிட்ட நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. இரு நாடுகளும் மூர்க்கத்தனமாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும் பொருட்சேதமும் அதிகரித்தது.

இதையும் படிங்க: உயிர் தப்பி இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த 160 இந்தியர்கள்..! உற்சாகமாக வரவேற்ற உறவினர்கள்..!

இதனால் ஈரான், இஸ்ரேல் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.  இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. 

கடந்த 22ஆம் தேதி அதிகாலை ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. ஈரானின் போர்ட்டோ, நார்டன்ஸ், எஸ்பகான் ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்காவின் பி-2 ரக விமானங்கள் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசின.

இதில் அந்த அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் இன்று நடவடிக்கையால் மேலும் கோபமடைந்த ஈரான் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் கத்தாரில் அமெரிக்கா விமான தளங்கள் அமைத்திருக்கும் நிலையில் அங்கு தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே நேற்று கத்தாரின் தோகாவில் உள்ள அமெரிக்க விமான படைக்கு சொந்தமான அல்-உதெய்த் விமான தளத்தை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் கத்தார் இந்த தாக்குதலை சாமர்த்தியமாக சமாளித்ததாகவும் ஈரானின் தாக்குதல் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

தாக்குதல் குறித்த முன்னறிவிப்புக்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இந்த நிலையில்தான், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் 6 ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும். அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். 

இந்தப் போர், பல ஆண்டுகளாக நடந்து, மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக அமைந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல், ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார். மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் கடவுள் ஆசிர்வதிப்பார். உலகை கடவுள் ஆசிர்வதிப்பார் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 900 பேரை கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம்.. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ஈரான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share