×
 

900 பேரை கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம்.. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ஈரான்..!

ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானியர்கள் 850 பேர் வரை பலியாகி இருக்கின்றனர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் இன்று 11வது நாளாக  தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று இஸ்ரேலுக்கு துணையாக அமெரிக்காவும் ஈரான் மீது  அதிரடி தாக்குதலை நடத்தியது. ஈரான் நாட்டிலுள்ள  ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்பஹான் (Esfahan) அணு சக்தி கூடங்களை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அந்த 3 இடங்களிலும் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாத அளவுக்கு முற்றிலும் அழித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். 

ஆனால், அணு உலைகளில் பாதிப்பு பெரியளவில் இல்லை என ஈரான் சொல்கிறது. அமெரிக்காவின் தாக்குதல் ஈரான் இஸ்ரேல் போரில் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்தது இஸ்ரேல் ராணுவத்துக்கு  புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. ஈரானில் இன்று பல இடங்களில் வான் வழி தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியது. 

மேற்கு, கிழக்கு, மத்திய ஈரானில் உள்ள  6 விமான நிலையங்களை குறி வைத்து  இஸ்ரேல் வான் வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 6 விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதைகளை அழித்து விட்டதாக  இஸ்ரேல் ராணுவம் கூறியது. தாக்கப்பட்ட 6 விமான நிலையங்களின் வரைபடத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் ஈரானும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: 6 ஏர்போர்ட் மீது அட்டாக்.. இறங்கி அடிக்க துவங்கிய இஸ்ரேல்.. ஈரான் மீது குண்டு மழை..!

நேற்று அமெரிக்கா தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் இஸ்ரேல் மீது ஈரான் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி தாக்கியது. ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் பல இடங்கள் பற்றி எரிந்தன. குறிப்பாக டெல்அவிவ், ஹைஃபா உட்பட 10 இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்கா தாக்குதல் நடத்தி முடித்த சிறிது நேரத்தில் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டு வீசி இருந்தது. இஸ்ரேல் மீது ஏவி விட தயார் நிலையில் இருந்த பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்களை குறி வைத்து குண்டு வீசியது.

பல ஏவுதளங்களை தகர்த்ததோடு, அங்கிருந்த ஈரான் ராணுவ வீரர்கள் பலரையும் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த சூழலில் இஸ்ரேல் மீது ஈரான் இன்று புதிய ஏவுகணை தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. ஈரான் சுமார் 15 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதில் சில இடங்கள் நேரடி தாக்குதலுக்கு உள்ளாகின. குறிப்பாக ஜெருசலேமில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதால் நாடு முழுவதும் சைரன்கள் ஒலித்தன.

ஈரானின் புதிய ஏவுகணை தாக்குதலை, உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தி உள்ளது. இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானியர்கள் 850 பேர் வரை பலியாகி இருக்கின்றனர். 1500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஹோர்முஸ் நீரிணை மூடலால் இந்தியாவுக்கு பாதிப்பு? பெட்ரோல், டீசல் விலை எகிறுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share