போர் இன்னும் முடியல!! மீண்டும் தாக்குதல் நடத்த தயார்! ஈரானுக்கு இஸ்ரேல் வார்னிங்!
ஈரான் மீது முன் எப்போதும் இல்லாத வகையில் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஜெருசலேம்: ஈரான் மீது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தமும் உருவானது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால் அமெரிக்கா ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் மீண்டும் பிராந்தியப் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹட்செரிம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை பட்டமளிப்பு விழாவில் பேசிய நெதன்யாகு, “கடந்த இரண்டு ராணுவ நடவடிக்கைகளால் ஈரான் மிகவும் பலவீனமடைந்துள்ளது. ஏமன் முதல் ஈரான் வரை தாக்குதல் நடத்தும் திறன் இஸ்ரேல் விமானப்படைக்கு உள்ளது என்பதை நாங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: இந்தியா ஆதரவு எங்களுக்கு தான்!! அமெரிக்காவுடன் மல்லுக்கட்டும் இஸ்ரேல்! நெதன்யாகு தம்பட்டம்!
மேலும், “ஈரானுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை. போருக்கு சாத்தியமான அனைத்து நிகழ்வுகளுக்கும் டெல் அவிவ் தயாராக உள்ளது. ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்க மாட்டோம். நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஈரான் ஏற்கனவே அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
ஈரான் மீது இஸ்ரேல் ஏற்கெனவே பல தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், பிரதமர் நெதன்யாகுவின் இந்தப் பேச்சு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலுக்குப் பிறகு பிராந்தியத்தில் மோதல் சூழல் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஈரான் தரப்பில் இன்னும் உத்தியோகபூர்வமான எந்த பதிலும் வராத நிலையில், இஸ்ரேலின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வரும் வேளையில், இஸ்ரேலின் இந்தத் தயார் நிலை புதிய மோதலுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இஸ்ரேல் தனது பாதுகாப்புக்கு எந்த அளவுக்கு தயாராக உள்ளது என்பதை நெதன்யாகு இந்தப் பேச்சின் மூலம் உலகுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!! அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!