ஹமாஸ் தலைவரை போட்டுத்தள்ளியது இப்படித்தான்! ஸ்கெட்ச் போட்டதை விவரிக்கும் இஸ்ரேல்..!
ஹமாஸ் தலைவன் முகமது சின்வார் உடலை ஹமாஸ் அமைப்பின் சதி செயலுக்கு முக்கிய பங்கு வகித்த சுரங்கத்தில் இருந்து மீட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் 2023 அக்டோபரில் காசாவை ஒட்டிய இஸ்ரேல் எல்லையில் திடீர் தாக்குதல் நடத்தி 200க்கும் மேற்பட்டோரை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். அவர்களை மீட்கவும், தாக்குதலுக்கு பதிலடியாகவும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது. டிரம்ப் அதிபரானதும் அமலுக்கு வந்த போர் நிறுத்தம் 2 மாதம் கூட நீடிக்கவில்லை.
ஒரே நேரத்தில் பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், காசாவில் மீண்டும் போரை துவங்கியது இஸ்ரேல். மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்கத்துடன் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதுவரை காசாவில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. 2023 அக்டோபரில் போர் வெடித்த பிறகு பதவிக்கு வந்த எல்லா ஹமாஸ் தலைவர்களையும் இஸ்ரேல் கொன்று விட்டது.
இதையும் படிங்க: தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!
22 ஆண்டுகள் ராணுவ தலைவனாக இருந்த முகமது டெய்ஃபை 2024 ஜூலையில் குண்டு வீசி கொன்றது. அதே மாதம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து ஹமாசின் அனைத்து வடிவிலான அமைப்புகளுக்கும் தலைவனாக இருந்த இஸ்மாயில் ஹனியேவை குண்டு வீசி கதை முடித்தது. ஹனியே மரணத்துக்கு பிறகு ஹமாசின் புதிய தலைவனாக யாஹ்யா சின்வார் பதவி ஏற்றான். அவனையும் அடுத்த சில மாதங்களில் இஸ்ரேல் போட்டுத்தள்ளியது.
இதுவரை அதை ஹமாஸ் உறுதி செய்யாத நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது தரப்பில் உறுதி செய்துள்ளார். அந்நாட்டு பார்லிமென்ட்டில் பேசிய நெதன்யாகு, இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்கள் பெயர் வரிசையில் முகமது சின்வார் பெயரையும் அறிவித்து அவனது மரணத்தை உறுதி செய்தார். இந்த நிலையில் ஹமாஸ் தலைவன் கொலை பின்னணி விவரங்களை இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் கூறியதாவது: காசா மருத்துவமனையின் கீழ் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஹமாஸ் தலைவர் முகமது சின்வாரின் உடலை கண்டுபிடித்தோம். ராணுவ நடவடிக்கையின் போது இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இடத்தை ஹமாஸ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி உள்ளது. மற்றொரு மூத்த ஹமாஸ் தலைவரும், ரபா படைப்பிரிவின் தளபதியுமான முகமது ஷபானாவும் இறந்து கிடந்தனர்.
மேலும் பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவர்களது உடலை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ரபா நகரில் அமெரிக்க ஆதரவுடன் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் நிவாரணப் பொருள் விநியோக மையம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பாலத்தீனர்கள் 5 பேரை இஸ்ரேல் படையினர் சுட்டுக்கொன்றனர்.
தங்கள் படைகளை நோக்கி முன்னேறி வந்த சிலரை எச்சரிக்கும் வகையில் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ரூ.5 பிஸ்கட் ரூ.2400க்கு விற்பனை.. காசாவில் போரால் ருத்ர தாண்டவம் ஆடும் வறுமை..!