எங்கள் மண்ணை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்! பிரதமர் மோடியிடம் மியான்மர் அதிபர் உறுதி!
'இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு எதிராக, மியான்மர் மண்ணில் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி அளிக்க மாட்டோம்' என, பிரதமர் மோடியிடம், மியான்மர் அதிபர் உ மின் ஆங் லைன் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்தியாவின் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக மியான்மர் அதிபர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் டெல்லி வந்துள்ளார். அவரது வருகை, இந்தியா – மியான்மர் உறவுகளில் புதிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர், இரு நாடுகளின் பாதுகாப்பு, எல்லை ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்கு பின்னர் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, மியான்மரின் நிலப்பரப்பு இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக எந்தவிதத்திலும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று மியான்மர் அதிபர் உறுதியளித்ததாக தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அல்லது தேசவிரோத நடவடிக்கைகளுக்கு மியான்மர் நிலப்பரப்பு பயன்படாது என்பதும் அந்த உறுதியின் முக்கிய அம்சமாகும்.
இதையும் படிங்க: மியான்மர்: திடீரென கேட்ட வெடி சத்தம்.. சரிந்த கட்டிடங்கள்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, மியான்மரின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். சீனாவுடன் நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்ளும் மியான்மரின் புவியியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டால், இந்த உறுதிமொழி இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு கொள்கையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மியான்மர் அதிபராக பொறுப்பேற்ற பிறகு ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இதனால் இந்த சந்திப்பு சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திப்புக்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, மியான்மர் அதிபருடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாகவும், இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பல முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மரில் 2021 முதல் ராணுவ ஆட்சி நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களுக்கு பின்னர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் அதிபராக பொறுப்பேற்றாலும், அந்த தேர்தல்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக தன்மை குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ளன.
அதேநேரத்தில், அரசுக்கு எதிரான பல கிளர்ச்சி இயக்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் இந்தியா – மியான்மர் உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுவது பிராந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தெலுங்கானாவுக்கு வயசு 12!! பிரதமர் மோடி செஞ்சுக்கொடுத்த பிராமிஸ்! மத்திய அரசு உறுதி!