நேபாள Gen Z இளைஞர்கள் போராட்டம் எதிரொலி!! முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!!
நேபாளத்தில் கடந்த ஆண்டு நடந்த இளைஞர்கள் போராட்ட அடக்குமுறை தொடர்பாக, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டார்.
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இளைஞர்கள் (Gen Z) போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 76 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று (மார்ச் 28) கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது நடைபெற்றுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் 8ஆம் தேதி, சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழலை ஒழிக்கக் கோரியும் இளம் தலைமுறையினர் பார்லிமென்டை நோக்கி பேரணி நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு நாட்கள் நீடித்த இந்த வன்முறையில் 76 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. பலர் குண்டடி பாய்ந்து பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்புக்கும் மிகச்சிறந்த உறவு உள்ளது!! ஐஸ் வைக்கும் வெள்ளை மாளிகை!!
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் அழுத்தத்திற்கு உள்ளான ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசும் கலைக்கப்பட்டது. போராட்ட அடக்குமுறை தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி கவுரி பகதூர் கார்கி தலைமையிலான இந்தக் குழு, ஒலி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைத்தது. இதன்படி, போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இன்று காலை, பக்தபூரில் உள்ள ஒலியின் இல்லத்திலிருந்து போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். இதேபோல் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்குப் பின்னணியில், போராட்ட வன்முறையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
சுவாரஸ்யமாக, இந்த கைது நேற்று (மார்ச் 27) நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா (பாலன் ஷா) பதவியேற்ற ஒரு நாள் கழித்து நடைபெற்றுள்ளது. 35 வயதான ராப் பாடகரும், காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா, ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சியின் தலைவராக இளம் தலைமுறையினரின் ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்று 47வது பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்த சம்பவம் நேபாள அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இளைஞர்களின் போராட்டம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய பிறகு, இப்போது பொறுப்புக்கான கணக்கு கேட்கப்படும் காலம் வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஒலி தரப்பில் இந்த கைதை “அரசியல் பழிவாங்கல்” என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 நாள் போர் நிறுத்தம் ஏன்?! படைகளை குவிக்கும் ட்ரம்ப்!! ஈரானை முடித்துக் கட்ட அமெரிக்கா போடும் ஸ்கெட்ச்!