மூக்கறுபட்ட ட்ரம்ப்!! இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? அமெரிக்க அதிபரை அசால்ட்டாக தட்டிவிட்ட ஈரான்..!
போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது. மேலும் இஸ்ரேல் தான் ஈரான் மீது முதலில் போரை தொடங்கியது என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.
ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறிய இஸ்ரேல், இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த ஜூன் 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, இஸ்ரேல் மீது ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3 என்ற பெயரில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், இஸ்ரேல் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது.
இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. கடந்த 22ம் தேதி ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக நேற்றிரவு ஈரான் ஏவுகணைகளால் கத்தார் அமெரிக்க தளத்தை தாக்கியது. இருப்பினும், தாக்குதல் குறித்த முன்னறிவிப்புக்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இந்த நிலையில்தான், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: உயிர் தப்பி இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த 160 இந்தியர்கள்..! உற்சாகமாக வரவேற்ற உறவினர்கள்..!
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் 6 ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும்.
அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்தப் போர், பல ஆண்டுகளாக நடந்து, மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக அமைந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல், ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார். மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் கடவுள் ஆசிர்வதிப்பார். உலகை கடவுள் ஆசிர்வதிப்பார் என ட்ரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் போரின் போதும் கூட டிரம்ப் தான் போர் முடிவுக்கு வருவதாக முதலில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால் இப்போது டிரம்ப் அறிக்கைக்கு ஈரான் வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது. இப்போதைக்கு போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் இல்லை.
ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தினால் நாங்கள் பதிலடியைத் தொடர மாட்டோம். எங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறி உள்ளார். இஸ்ரேல் தரப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமருடன் அதிபர் டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் நாட்டின் தலைவர்களுடன் கத்தார் நாட்டின் தலைவர்கள் நேரடியாக பேசி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்வோம் என்று இஸ்ரேல் பிரதமரும், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்திக் கொள்வோம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர்.எனினும் இரு நாட்டினரும் இது பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் போர் நிறுத்தம் அமலுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 900 பேரை கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம்.. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ஈரான்..!