×
 

மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்தணும்!! ஈரானுக்கு எதிராக ஐ,நாவில் தீர்மானம்!

மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலால் ஈரானுடன் போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) சார்பில் பஹ்ரைன் கொண்டு வந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

தீர்மானத்தில், ஈரான் உடனடியாக மேற்காசிய நாடுகள் மீதான அனைத்து தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உலக எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் விதித்துள்ள தடைகள், கப்பல் போக்குவரத்து தடங்கல்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியது.

இருப்பினும், தீர்மானத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டது குறிப்பிடப்படாததற்கு ரஷ்யாவும் சீனாவும் கடும் கண்டனம் தெரிவித்தன. "ஒருதலைப்பட்சமான தீர்மானம்" என்று இரு நாடுகளும் விமர்சித்தன. இருப்பினும், அவை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்ததால் தீர்மானம் தடையின்றி நிறைவேறியது.

இதையும் படிங்க: நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!

இந்த தீர்மானம் ஈரான் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளித்திருந்தாலும், மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு தடை தொடர்கிறது.

இந்த தீர்மானம் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. ஆனால் ஈரான் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. உலக நாடுகள் அனைத்தும் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து, எண்ணெய் விநியோகத்தை சீராக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்தியா இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தது, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: பாதிக்கப்படும் குழந்தைகள்! விரைவில் அமைதி கிடைக்கும்!! ஐநா சபையில் அதிபர் ட்ரம்ப் மனைவி உருக்கம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share