ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!
ஒரு கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பிடித்ததாகவும், கப்பல்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள அமெரிக்கா, ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் பலவற்றைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கு இடையேயான பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மார்ஷல் தீவுகள் கொடி பறக்கும் M/T அல் ரெகய்யத், சவுதி அரேபியா கொடி பறக்கும் M/T வெட்யான் மற்றும் லைபீரியா கொடி பறக்கும் M/T சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய கப்பல்கள் இதில் அடங்கும்.
ஒரு கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பிடித்ததாகவும், கப்பல்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கு வலுவான பதிலடியாக அமெரிக்கப் படைகள் ஈரானின் 80க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்கின.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!
வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் நிலையங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க்குகள், எதிர்ப்பு-கப்பல் ஏவுகணை தளங்கள் உள்ளிட்ட முக்கிய வசதிகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்தன. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலைநிறுத்தப்பட்ட ஈரான் புரட்சிகர காவல் படையின் (IRGC) 60க்கும் மேற்பட்ட சிறிய படகுகளும் முழுமையாக அழிக்கப்பட்டன. கடந்த 10 நாட்களுக்கு முன் நடைபெற்ற தாக்குதலைவிட இம்முறை நடவடிக்கை 4 முதல் 5 மடங்கு பெரிய அளவில் இருந்ததாக CENTCOM தெரிவித்துள்ளது.
உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான டன் எண்ணெய் உள்ளிட்ட ஆற்றல் வளங்கள் கடத்தப்படுகின்றன. ஈரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கி வருவதைத் தடுத்து, சர்வதேச வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அமெரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் ஈரானின் கடல் தாக்குதல் திறன் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் கெஷ்ம் தீவு உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில இடங்களில் உடைமைகள் சேதமடைந்ததாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஈரான் தரப்பில் இன்னும் விரிவான அதிகாரப்பூர்வ பதில் வராத நிலையில், எந்தத் தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தகக் கப்பல்கள் போக்குவரத்து தொடங்கியிருந்த வேளையில், இந்தப் புதிய தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளன. உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த கவலைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: ”ஒரு குண்டு போதும்... எல்லாரும் குளோஸ்...” - காமேனி இறுதிச்சடங்கிற்கு இடையில் வார்த்தையை விட்ட டிரம்ப்... உச்சக்கட்ட டென்ஷனில் உலக நாடுகள்...!