கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் 140 தொகுதிகளிலும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசாரத்தின் அனல் அதிகரித்துள்ளது. ஆளும் இடதுசாரி முன்னணி (எல்.டி.எஃப்) கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான யுனைடெட் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் (யு.டி.எஃப்) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தப் போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி நேற்று கேரளாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தனக்கும் கேரள மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவை நினைவுகூர்ந்தார்.

அவர் கூறியதாவது: “கேரளாவில் ஐந்து ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. தற்போது எனது தாயார் சோனியா காந்தியின் உடல்நிலை சற்று குன்றியுள்ள நிலையில், அவரைப் பார்க்கவும், உங்களைச் சந்திக்கவும் இங்கு வந்துள்ளேன். எனது தாயாரை கேரளாவைச் சேர்ந்த அன்பான மலையாள செவிலியர்கள் அருகில் இருந்து அக்கறையுடன் கவனித்து வருகிறார்கள். அவர்களின் அன்பான பராமரிப்பு காரணமாகவே, இன்று உங்களுடன் இங்கு நின்று பேச முடிகிறது” என்றார்.
இதையும் படிங்க: 5 மாநில தேர்தல்கள் முடிஞ்சதும் தரமான சம்பவம் இருக்கு..!! மக்களுக்கு வார்னிங் கொடுக்கும் ராகுல் காந்தி..!!
மேலும், “உலகில் வேறு எந்த மக்களிடமும் இத்தகைய அளவற்ற அன்பும், நேர்மையும், உண்மையான ஆதரவும் எனக்குக் கிடைத்ததில்லை. எனது வாழ்க்கையின் மிகக் கடினமான மற்றும் நெருக்கடியான தருணங்களில், நான் வீழ்ந்துவிடுவேனோ என்று உணர்ந்த சமயங்களில், கேரள மக்கள்தான் எனக்கு உறுதுணையாக நின்று, தைரியம் கொடுத்தார்கள். அந்த நேரங்களில் அவர்கள் எனக்கு அளித்த ஆதரவை நான் ஒருபோதும் மறக்க முடியாது. கேரள மக்களிடம் நான் மிகுந்த நன்றியுடன் இருக்கிறேன்” என்று உணர்ச்சிப் பொங்க ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்த உரை, கேரள மக்களுடனான அவரது தனிப்பட்ட தொடர்பை வலியுறுத்தியதாக அமைந்தது. அவரது பிரசாரம், காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவைத் திரட்டும் வகையில் இருந்தது. தேர்தல் நெருங்கும் வேளையில், இரு கூட்டணிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் வருகை யு.டி.எஃப்-க்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!