சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (அமமுக) தொடங்கிய டிடிவி தினகரன், தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே பல மாவட்ட நிர்வாகிகள் ஒரே நேரத்தில் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்கப் போவதாக கூறி கட்சி தொடங்கிய தினகரன், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 11 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் மன்னார்குடியில் மட்டுமே வெற்றி பெற்றார். அந்தத் தொகுதி எம்எல்ஏ காமராஜ், நேற்று முன்தினம் சட்டசபையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசியதால், தினகரன் உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்கினார். இந்த நடவடிக்கை அமமுகவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் விலகும் அலை தொடங்கியுள்ளது. திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் செந்தில் நாதன், கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். “எடப்பாடியை எதிர்த்தும், அதிமுகவை மீட்கவும் கட்சி தொடங்கிய தினகரன், இப்போது எடப்பாடியை ஆதரித்து துரோக வழியில் செல்கிறார்” என்று செந்தில் நாதன் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: எந்த கட்சியில இருக்கீங்கன்னே மறந்துட்டீங்களா ஆதவ்?! உதயநிதி ஸ்டாலினை மிஞ்சிட்டீங்க! அண்ணாமலை கிண்டல்!

இதேபோல் திருவாரூர் முத்துப்பேட்டை நகர செயலாளர் லக்கி நாசர், அமமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் யானை காலித் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் பலர் கூண்டோடு விலக முடிவு செய்துள்ளனர்.
மேலும், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், “கட்சி ஆரம்பித்த நோக்கத்தை மறந்து எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் உங்கள் சுயநல போக்கால் விலகுகிறேன்” என்று தினகரனுக்கு கடிதம் எழுதி விலகியுள்ளார். இந்த தொடர் விலகல்கள் டிடிவி தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமமுகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகுவது கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அதிமுகவை மீட்கப் போவதாக உருவாக்கப்பட்ட கட்சி, இப்போது உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே உடைந்து போகும் அபாயத்தில் உள்ளது. தினகரனின் திடீர் முடிவுகள் மற்றும் காமராஜ் விவகாரம் கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்கள் அதிமுக - அமமுக இடையிலான உறவு மற்றும் தமிழக எதிர்க்கட்சி அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாய்விட்ட தவெக எம்.எல்.ஏ! இதுதான் அரசின் லட்சணமா? கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்!