செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகிலுள்ள காலவாக்கம் பகுதியில் இன்று காலை மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தார்.
முன்னதாக திமுக ஆட்சியின் மீது மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவியதாக வைகோ சுட்டிக்காட்டினார். “திமுக ஆட்சியில் ஒரு சதுர அடி நிலத்திற்கு எவ்வளவு கமிஷன் எனக் கணக்கிட்டு லஞ்சம் பெறப்பட்டது. கமிஷன், கட்டிங், கரப்ஷன் ஆகியவை எங்கும் நிறைந்திருந்தன. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற உடனேயே இத்தகைய ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்” என்று புகழ்ந்தார்.
தவெகவுடன் மதிமுக இணைந்துள்ளதை உறுதிப்படுத்திய வைகோ, “இந்த ஐந்தாண்டுகள் மட்டுமல்ல, அடுத்த ஐந்தாண்டுகளிலும் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய்தான் தொடர்வார்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தவெக கூட்டணியில் மதிமுக ஓர் அங்கமாக உறுதியுடன் செயல்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: உளறிக்கொட்டிய வைகோ!! உச்சக்கட்ட கோவத்தில் CM விஜய்! கூட்டணி முடிவு குழிதோண்டி புதைப்பு?!
இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. “திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது அதன் ஊழல் பற்றி ஏன் வைகோ பேசவில்லை? கமிஷன், கட்டிங், கரப்ஷன் நடைபெற்றபோது ஏன் மௌனம் காத்தீர்கள்?” என்று அந்த செய்தியாளர் கேட்டார்.

இதற்கு கோபமடைந்த வைகோ, “கூட்டணியில் இருந்தபோது கூட்டணிக் கட்சியை விமர்சிப்பது அயோக்கியத்தனம். அது அரசியல் தர்மத்துக்கும், நாகரீகத்துக்கும் முரணானது” என்று கடுமையாக பதிலளித்தார். நீங்க எந்த பத்திரிகை சார்.. சொல்லுங்கள்.. பதில் சொல்லுங்க.. நீங்க மஞ்ச பத்திரிகையா? உங்க முதலாளி யார்.. கேஸ் போடுவேன்.. வெளியே போ என்று வைகோ கடுமையாக கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
வைகோவின் ஆதரவாளர்கள் அந்த பத்திரிகையாளரை நோக்கி முன்னேற முயன்றனர். உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தலையிட்டு, செய்தியாளரை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் மதிமுகவினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த வாரம் திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக வைகோ அறிவித்தார். இன்றைய பேட்டியில் அந்த முடிவில் உறுதியாக இருப்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
திமுக ஆட்சியில் நிலவிய ஊழல் மற்றும் மக்கள் அதிருப்தியைச் சுட்டிக்காட்டிய வைகோ, தற்போதைய ஆட்சியின் தூய்மையான அணுகுமுறையை வரவேற்றார். தவெக தலைவர் விஜய்யின் தலைமையில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் மதிமுகவின் திசைமாற்றம் மற்றும் புதிய கூட்டணி உறவுகள் குறித்த விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு மோசமான அரசியல் - வைகோ ஆவேசம்!