தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, பொதுமக்கள் நலன் கருதி ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இயங்கும் மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவை வெளியிட்டது. இதன் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, தமிழக அரசின் முதல் பெரிய கொள்கை முடிவாக பார்க்கப்படுகிறது.
மொத்தம் 4,765 டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள 717 கடைகள் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டன. இவற்றில் 276 கடைகள் வழிபாட்டுத் தலங்கள் அருகிலும், 186 கடைகள் கல்வி நிறுவனங்கள் அருகிலும், 255 கடைகள் பேருந்து நிலையங்கள் அருகிலும் உள்ளன. பொதுமக்கள் நலன் கருதி இந்தக் கடைகளை இரு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த முடிவு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான போதைப்பொருள் இல்லாத தமிழகம் உருவாக்கும் இலக்கை நோக்கிய முதல் படியாக அமைந்தது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, அதிகாரிகள் முழு மாநில அளவில் ஆய்வு மேற்கொண்டனர். சில இடங்களில் தூர அளவீட்டில் குழப்பம் ஏற்பட்டதால், மூடல் பணிகள் சிறிது தாமதமானாலும், படிப்படியாக செயல்படுத்தப்பட்டன. சுமார் 150 கடைகள் முதலில் மூடப்பட்ட நிலையில், பின்னர் முழுமையான மூடல் நடைமுறைக்கு வந்தது. சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட கடைகளின் முழு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாக, மண்டல வாரியாக பட்டியல் தரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மலிவான அரசியல்"... காங்கிரஸ் மீது திடீர் தாக்குதல் ஏன்..? K.N. நேரு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு..!

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அறிவிப்பு வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயலாக மாறுவதைக் காண மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மாவட்ட வாரியாக மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புணர்வுக்கும் ஒரு நல்ல முன்னேற்றம் என்றும் கூறினார்.
உண்மையான மாற்றம் என்பது அறிவிப்புகளால் தொடங்குவதில்லை என்று தெரிவித்த அவர், அந்த அறிவிப்புகள் நடைமுறையில் அமல்படுத்தப்படும்போதுதான் தொடங்குகிறது என்றும் வாக்குறுதிகளை வழங்குவது எளிது. அவற்றை நிறைவேற்றுவதில்தான் நல்லாட்சியின் அடையாளம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது மக்கள் நலனை மையமாகக் கொண்ட இன்னும் பல மாற்றங்களின் தொடக்கமாக அமையட்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!