சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார். இந்த கோவிலுக்கு மதுரையை சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது தனது தாயின் நகையை அஜித்குமார் திருட முயன்றதாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் அஜித் குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், அஜித் குமார் உயிரிழந்துள்ளார். போலீசார் தாக்குதலால் அவர் இறந்து விட்டதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நடிகை மீனாவுக்கு மாநில பொறுப்பு...! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பிரஸ்மீட்...!

இந்த நிலையில் காவல் நிலையத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது என்றும் தெரிவித்தார்.

கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே, ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகி இருப்பதாகவும் காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இந்த விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஆணவ அரசியலை அழிப்பது உறுதி.. ஆ.ராசா பேச்சால் கொதித்துப்போன நயினார்..!