அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வந்தன. பாதிக்கப்பட்ட மாணவி உட்பட மொத்தமாக 29 சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டன. அதேபோல் சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பில் 100க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் என 100 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

இதன்பின் நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகர் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளார். இந்த நிலையில் ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும் என்று அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக-வின் உடன்பிறப்பான ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிபடுத்திய சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
இதையும் படிங்க: #BREAKING ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை? - தீர்ப்பு குறித்து பெண் நீதிபதி பரபரப்பு உத்தரவு!

பெண்களின் மீது வன்முறை ஏவுபவர்கள் அரசியல் பின்புலமும் பணபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ள இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும்.

அரசியல் ரீதியாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே தனது முழுவிபரத்தை வெளியிட்டு பழி வாங்கினாலும் மனம் தளராது நீதிக்காக போராடி இன்று அதில் வெற்றி கண்டுள்ள அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது பாராட்டுகள்! அதற்கு துணை நின்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிமான்களுக்கும் எனது வாழ்த்துகள்! ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்! என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING ஞானசேகரன் குற்றவாளி - அண்ணா பல்கலைக்கழக வழக்கில் நீதிபதி அதிரடி அறிவிப்பு!