அந்தரத்தில் தொங்கிய பயணி… 3,500 அடி பள்ளத்தாக்கில் நடந்த பரபரப்பு மீட்பு!
3,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் ஜிப்லைனில் சிக்கிய சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள தோரன்மால் மலைப்பிரதேசம், மகாராஷ்டிராவின் இரண்டாவது குளிர்ச்சியான மலை வாழிடமாக அறியப்படுகிறது. அங்குள்ள சீதாகாய் பாயின்ட் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஜிப்லைன் விளையாட்டுத் தளத்தில் நேற்று பதட்டமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. சுமார் ரூ.2 கோடி செலவில் மாவட்ட ஆண்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த சாகச ஜிப்லைன், ஆழமான பள்ளத்தாக்கின் பரந்த காட்சிகளை வழங்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தது.
சாகச விரும்பி ஒருவர் உற்சாகமாக ஜிப்லைனில் பயணித்தபோது, 3,500 அடி ஆழமுள்ள பயங்கர பள்ளத்தாக்கின் நடுவே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஜிப்லைன் திடீரென நின்றுவிட்டதால், அவர் அந்தரத்தில் சிக்கிக் கொண்டார். கீழே மரணக் குழி போன்ற ஆழம், மேலே மெல்லிய கயிறு என்ற நிலையில் அவர் உயிருக்குப் போராடியதைக் கண்டு அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகள் அலறினர். முழு மலைப்பகுதியும் பரபரப்பில் மூழ்கியது.
தகவல் அறிந்ததும், ஜிப்லைன் மையத்தின் பயிற்சி பெற்ற மீட்புப் பணியாளர்கள் உடனடியாக களமிறங்கினர். ஒரு பணியாளர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதே கயிற்றின் வழியே சறுக்கி, கடும் காற்றையும் மீறி சாதுரியமாகச் செயல்பட்டு, சிக்கிய பயணியை அணைத்தபடி பாதுகாப்பாகத் தரைக்குக் கொண்டு வந்தார். நூலிழையில் உயிர் தப்பிய அந்தப் பயணிக்கு எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: ரெட் அலர்ட்!! அடுத்த 3 நாட்களில் 50 செ.மீ மழை பெய்யும்!! மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! எகிறும் பலி எண்ணிக்கை!
இந்த திக் திக் நிமிடங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்போரை நெஞ்சு பதற வைத்துள்ளது. சாகசத் தலங்களில் பாதுகாப்பு முறைகளை இன்னும் பலப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவின் தண்டேலியில் சமீபத்தில் நடந்த இதேபோன்ற ஜிப்லைன் விபத்தையும் நினைவுகூர்ந்து, அவசர மீட்புத் தயார்நிலை மற்றும் தொடர் பராமரிப்பு அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: தென் தமிழகத்தை புறக்கணிக்காதீர்கள்! பட்ஜெட்டில் சிறப்பு நிதி கேட்கும் 11 மாவட்ட தொழில் சங்கங்கள்!!